அரசு ஊழியர் சங்கங்களுடன் முதல்வர் பேச்சு நடத்த வேண்டும்: வீரமணி கோரிக்கை
சென்னை: 20 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் கடந்த 9 நாட்களாகப் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கும் நிலையில், அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது - ஜனநாயக மாண்புக்கு உகந்ததல்ல.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர் சங்கங்களுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
'20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஜனநாயக மாண்புக்கு உகந்தது அல்ல. தமிழக சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கும் நிலையில் போராடும் அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சு நடத்த வேண்டும்.
கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு துறைகளை சேர்ந்த சங்கங்களின் நிர்வாகிகள் போராடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் புதன்கிழமை மறியல் போராட்டம் நடந்தது. இதில் 4 லட்சம் அரசு ஊழியர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் என 6 லட்சம் பேர் கலந்து கொண்டு கைதானார்கள்; இதே போல், நீதித் துறையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட சுமார் 12 ஆயிரம் பேர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஆட்சிக்கு எஞ்ஜின் அரசுப் பணியாளர் அல்லவா!
அரசுப் பணியாளர்கள் ஆட்சி இயந்திரத்தை இயக்கும் எஞ்ஜின் ஆகும். அந்த முக்கிய எந்திரம் பழுதுபட்டால் உடனடியாகக் கவனித்தால்தானே ஆட்சி வாகனம் சரியாக ஓடும்? அரசுப் பணியாளர்கள் என்கிறபோது அவ்வப்போது கோரிக்கைகளை வைக்கத்தான் செய்வார்கள் - ஆட்சி நடைமுறையில் இது அதோடு இணைந்த நீரோட்டம்தான்.
கோரிக்கைகள் எத்தகையவை என்பது ஒருபுறம் இருக்கட்டும்; குறைந்தபட்சம் ‘உங்கள் கோரிக்கைகள்தான் என்ன?' என்று அழைத்துப் பேசக்கூட முதல் அமைச்சர் தயாராக இல்லை என்றால் அதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டாமா?
அதுவும் சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், லட்சக்கணக்கான அரசுப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதுபற்றி அறவே அரசு கண்டு கொள்ளவில்லை என்பது அசாதாரணமானது - மக்கள் ஆட்சி நிருவாகத்தையே கேள்விக் குறியாக மட்டுமல்ல; கேலிக் குரியதாகவும் ஆக்கக் கூடியதாகும்.
எதிர்க்கட்சிகளுக்கும் வாய்ப்பு மறுப்பு!
ஆளும் கட்சித் தரப்பில் எந்தவித அறிவிப்பும் இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினர் இதுபற்றிய கவன ஈர்ப்பைக் கொண்டு வந்தால், அதையும் அனுமதிக்க மறுப்பது ஆட்சிச் சக்கரம் திக்குத் தெரியாமல் எங்கோ தடுமாறி ஓடிக் கொண்டு இருக்கிறது என்பதற்கான அடையாளமே.
மாற்றுத் திறனாளிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தலாமா?
மாற்றுத் திறனாளிகள் போராட வரும்போது, அவர்களை காவல்துறையினர் நடத்தும் விதம் மனிதநேயம் உள்ளவர்களில் குருதியை உறைய வைப்பதாகவே உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி ஒருவர் மரணம் அடைந்தார் என்பது அதிர்ச்சிக்குரியது! வேதனைக்குரியது.
நடப்பு சட்டமன்ற தொடரில் முதல் அமைச்சர் அறிவிக்கட்டும்! அழைத்துப் பேசட்டும்!
சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது; முதலமைச்சர் அரசுப் பணியாளர்கள் போராட்டம் குறித்து உகந்த அறிவிப்பைக் கொடுப்பது நல்லது; முதல் அமைச்சரே அழைத்துப் பேச வேண்டும்; கடந்த நாலே முக்கால் ஆண்டு ஆட்சியில் ஒருமுறைகூட முதல் அமைச்சர் அரசுப் பணியாளர் சங்கப் பிரதிநிதிகளிடம் நேரடியாகப் பேசியதில்லை; இது கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. அரசு அளித்த உறுதிமொழிக்கு எதிரானது என்று அரசுப் பணியாளர் சங்கத்தினர் கூறி இருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி விட்டதாக முதல் அமைச்சர் கூறியது எத்தகைய முரண்பாடு? அரசுப் பணியாளர்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்கட்டும் ஜனநாயக நாட்டில் ஆட்சியின் அணுகுமுறை இந்த வகையில் தான் இருக்க வேண்டும். இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.