எஸ்.ஆர். நாதனின் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பு: வேல்முருகன் இரங்கல்
சென்னை: சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபரான தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த எஸ்.ஆர். நாதன் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி அறிக்கை:
சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் அதிபரான தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த எஸ்.ஆர். நாதன் அவர்கள் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. எஸ்.ஆர். நாதனின் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
தமிழர் வம்சாவளியினரான செல்லப்பன்-அபிராமியம்மன் தம்பதியினருக்கு 1924-ம் ஆண்டு பிறந்தவர் எஸ்.ஆர். நாதன். சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் லீ குவான் யூவுக்கு நெருக்கமாக இருந்தவர் எஸ்.ஆர். நாதன்.
சிங்கப்பூர் அதிபர் பதவியை வகிப்பதற்கு முன்னதாக அந்நாட்டு அரசு உயர் அதிகாரியாக பணியாற்றினார். பாதுகாப்பு, உளவு, வெளியுறவு போன்ற துறைகளிலும் பணியாற்றி உள்ளார். 1988-ம் ஆண்டு மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதராகவும், 1990-ம் ஆண்டில் இருந்து 1996-ம் ஆண்டுவரை அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதராகவும் எஸ்.ஆர். நாதன் பணியாற்றினார்.
சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராகவும் இருந்துள்ளார். சிங்கப்பூர் அதிபராக 1999-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டுவரை எஸ்.ஆர். நாதன் பதவி வகித்தார். 2 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர் எஸ்.ஆர். நாதன்.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் பிரவாசி பாரதிய சம்மான் விருது 2012-ம் ஆண்டு எஸ்.ஆர். நாதனுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
2009-ம் ஆண்டு சிங்கப்பூர் மிகப்பெரிய பொருளியல் மந்தநிலையை எதிர்கொண்டபோது, முதன்முறையாக அரசாங்க இருப்பு நிதியிலிருந்து 4.9 பில்லியன் வெள்ளியைப் பயன்படுத்தி அனுமதி வழங்கியவர். தமது பதவிக்காலத்தில் அவர் உருவாக்கிய அதிபர் சவால் அறநிதி அவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய மதிப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. பல மில்லியன் வெள்ளி திரட்டப்பட்டு வசதி குறைந்தோருக்கு வழங்கப்பட்டது.
அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட எஸ்.ஆர். நாதன் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி உலகத் தமிழர்களை பெருந்துயரத்தில் ஆழ்த்தியது. சிங்கப்பூரில் தமிழர்களின் முகமாக திகழ்ந்த எஸ்.ஆர். நாதனின் மறைவு என்பது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பு.
எஸ்.ஆர். நாதன் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தம்முடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.