ஜெயலலிதா 68-வது பிறந்தநாள்: வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் வாழ்த்து
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68 -வது பிறந்தநாளை யொட்டி அவருக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
பிப்ரவரி 24-ந் தேதியன்று 68-வது பிறந்த நாளை கொண்டாடும் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு என்னுடைய மகிழ்ச்சியான இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் பேரெழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த எழுச்சிமிகுந்த மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் இணைந்து கொள்கிறது.
தமிழகத்தில் மக்களுக்கான நல்லாட்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து வழங்கிடும் வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும் வகையில் உழைப்போம் என இந்த இனிய பிறந்த நாளில் உறுதியேற்போம்.
உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முழு அக்கறை கொண்டு குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சனையில் தொடர்ந்தும் ஆறுதலானதும் ஆக்கப்பூர்வமானதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு உலகத் தமிழர்கள் சார்பாக நன்றியையும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான அரசு தொடர்ந்து மக்கள் பணிகளை செவ்வனே முன்னெடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி நல்லாதரவை வழங்கி உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.