சாமானிய மக்கள் வசிக்கவே முடியாத இடமாய் மாற்றப்பட்டுவிட்டதா சென்னை?.. வேல்முருகன் ஆதங்கம்!
வழக்கமான வடகிழக்குப் பருவமழையையே தாக்குபிடிக்க முடியாமல் சென்னை சாமானிய மக்கள் வசிக்கவே முடியாத இடமாய் மாறிவிட்டதா என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : வழக்கமாகப் பெய்யும் வடகிழக்குப் பருவமழைக்கே இப்போது ஏன் அதனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை? மக்களை மறந்து, முழுக்க முழுக்க தங்களை மாத்திரமே நினைத்து நாட்களை நகர்த்தும் ஆட்சியாளர்கள்தான் இதற்குக் காரணமா? என்ற கேள்வி எழுப்புவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : பிரச்சனைக்கு மேல் பிரச்சனை என்று திணறிக் கொண்டிருக்கிறது தமிழகம். இந்த நிலையில் இயற்கையும் அதாவது வழக்கமாகப் பெய்யும் வடகிழக்குப் பருவமழையும்கூட ஒரு பிரச்சனையாகியிருக்கிறது. குறிப்பாக தலைநகர் சென்னைக்கு இது ஆகப் பெரும் பிரச்சனை ஆகிவிட்டது.
பருவமழை சென்னைக்குப் பிரச்சனையாகிவிட்டது என்பதைவிட பிரச்சனையாக ஆக்கப்பட்டுவிட்டது என்பதுதான் சரியாக இருக்கும். அதுவும் முழுக்க முழுக்க இது ஆட்சியாளர்களால் ஆன பிரச்சனை என்பதுதான் உண்மையாகவும் இருக்கும். இப்போது பெய்துவரும் மழையால் சென்னையின் சாதாரண மக்கள் வாழும் பகுதிகள் அனைத்துமே தண்ணீரில் மூழ்கியிருக்கும் காட்சியே இதற்குச் சாட்சி! உலகிலேயே சென்னையைப் போன்று அழகாக, வசதியாக வாய்த்த நகரம் வேறெதுவும் இல்லை என்றுதான் சொல்லியிருக்கிறார்கள் வரலாற்றியல் அறிஞர்கள்.

ஊழல் முறைகேடுகள் தானா?
அரபிக் கடலும், அதில் மழைநீரையும் கழிவுநீரையும் கொண்டுசேர்க்கும் கூவம் ஆறு, கொசத்தலையாறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் இன்ன பிறவும் என இயற்கையாகவே அமைந்த எழில் நகரம்! ஆனால் இன்று எந்த நீரும் முறையாக கடலில் சேரவிடாதபடி ஆறுகளும் கால்வாய்களும் தடுக்கப்பட்டுள்ளன; காரணம் ஆக்கிரமிப்புகள்! இதுபோக, பாதாளச் சாக்கடைகளும் பராமரிக்கப்படாமல் தூர்ந்துபோகவிடப்பட்ட நிலை! ஆண்டுதோறும் அதனைத் தூர் வாருவதற்கென்ன கேடு? எல்லாமே ஊழல் முறைகேடுகள்தானா?

விளிம்பு நிலை மக்களுக்கு பாதிப்பு
இப்படி கேள்வி எழுப்பும் நிலையில்தான் இன்று சென்னை உள்ளது. மழை காலத்தில் மாநகரம் வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. ஆனால் இது வசதியானவர்கள் வாழும் பகுதிகளில் நடப்பதில்லை; வக்கற்ற போக்கற்ற அடித்தட்டு விளிம்புநிலை ஜீவன்கள் உள்ள பகுதிகளில் தான் நடக்கிறது.
வடசென்னை கொடுங்கையூரில் தண்ணீரில் மிதந்த மின் வயரால் மின்சாரம் தாக்கி சிறுமியர் இருவரின் உயிர் பறிக்கப்பட்டதே, இதைவிட வேறென்ன சான்று வேண்டும் இதற்கு?

அமைச்சர்கள் மட்டுமே சொல்கிறார்கள்
ஆனால் அறிவியல்பூர்வமான முறையில் மீட்புப் பணி நடக்கிறது; போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணி நடக்கிறது; அமைப்புரீதியிலான பேரிடர் மேலாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றெல்லாம் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்கள். பள்ளி, கல்லூரிகளுக்கு மறக்காமல் விடுமுறையும் விட்டிருக்கிறார்கள்.

வெள்ளம் வடிந்துவிட்டதா?
முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளப்பகுதிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், "எந்த இடத்திலும் தண்ணீர் தேங்கவில்லை; சரியான நேரத்தில் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் வெள்ளம் அதுவாக வடிந்துவிடுகிறது; தாழ்வான பகுதிகளில் துரிதகதியில் நீரை வெளியேற்றிவிட்டோம்; எல்லோருக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன" என்றும் ஊடகத்தில் சொல்கிறார்கள்.

தலைநகருக்கே இந்த நிலைமையா?
ஆனால் ஏழை எளிய மக்களோ, மழை வெள்ளத்தில் கிடந்து தவிக்கும் தங்களை இந்த அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை என்று புலம்புகிறார்கள்; இதையும் ஊடகத்தில்தான் பார்க்க முடிகிறது. ஆக, சாமானிய மக்கள் வசிக்கவே முடியாத இடமாய் மாற்றப்பட்டுவிட்டதா என்ன தலைநகர் சென்னை?
வழக்கமான வடகிழக்குப் பருவமழையையே இப்போது ஏன் அதனால் தாக்குப்பிக்க முடியவில்லை? மக்களை மறந்து, முழுக்க முழுக்க தங்களை மாத்திரமே நினைத்து நாட்களை நகர்த்தும் ஆட்சியாளர்கள்தான் இதற்குக் காரணமா?இப்படியான கேள்விகளே எல்லோர் மனதிலும் எழுகின்றன; அந்த கேள்விகளைத்தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் எழுப்புகிறது.












Click it and Unblock the Notifications