ஓக்கி போல குமரியை புயல் தாக்காது... அச்சம் வேண்டாம் - தமிழ்நாடு வெதர்மேன்
ஒக்கி புயல் போல மீண்டும் ஒரு புயல் கன்னியாகுமரியை தாக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: கன்னியாகுமரியை மீண்டும் ஒரு புயல் தாக்க வாய்ப்பு இல்லை. மீண்டும் ஒரு ஒக்கி புயல் தாக்கும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மக்கள் புழுக்கத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில் ஆங்காங்கே மழை பெய்கிறது.
கன்னியாகுமரி அருகே இந்திய பெருங்கடல் கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தீவிரம் அடைந்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இலங்கை, குமரிக்கடல், மாலத்தீவு ஆகிய பகுதிகளுக்கு இடையே வலுவடைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. அது அடுத்த 36 மணி நேரத்திற்குள் மேலும் வலுவடைந்து தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மாலத்தீவு அருகே தாழ்வு மண்டலமாக மாறுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வானிலை எச்சரிக்கை
மேலும் குமரிக்கடல், கேரளாவின் தெற்கு பகுதி, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும். இதன் காரணமாக லட்சத்தீவு, கேரளாவின் தெற்கு பகுதி, மன்னார்வளைகுடா ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் 36 மணிநேரத்தில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் லட்சத்தீவு நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

பீதி கிளப்பும் பதிவுகள்
இதனிடையே குமரியை மீண்டும் புயல் தாக்க வாய்ப்பு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி வருகிறது. இதனால் தென் மாவட்ட மக்கள் கலக்கமடைந்தனர். இதற்கு தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வலு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைதான். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம்.

ஓக்கி போல தாக்காது
ஓக்கி புயல் போல இது பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் லட்சத்தீவு நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

இடி மின்னலுடன் மழை
தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களிலும் கோடையை தணிக்கும் வகையில் தெற்கு, மேற்கு மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இடியுடன் கூடிய மழையை அனுபவிக்க தயாராகுங்கள் மக்களே என்று வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications