தினகரன் பற்றிப் பேசினால் பதவி போய்ரும்.. ஜெயக்குமாருக்கு வெற்றிவேல் கடும் எச்சரிக்கை
டிடிவி தினகரனுக்கு எதிராக பேசினால் அமைச்சர் ஜெயக்குமார் கட்சி பதவியையும், அமைச்சர் பதவியையும் இழக்க நேரிடும் என்று பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் எச்சரித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தால் பதவியிழக்க நேரிடும் என்று அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் எச்சரித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், 80க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் டிடிவி தினகரன், சசிகலாவிற்கு எதிரான மனநிலையிலேயே உள்ளனர். அணிகளை இணைக்காவிட்டால் நான் அதிமுக அலுவலகத்திற்கு வந்து கட்சிப்பணியாற்றுவேன் என்று தினகரன் பேட்டியளித்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சியும், ஆட்சியும் சிறப்பாகவே செயல்படுகிறது என்று கூறியுள்ளார்.
டிடிவி தினகரனுக்கு எதிராக பேசினால் அமைச்சர் ஜெயக்குமார் கட்சி பதவியையும், அமைச்சர் பதவியையும் இழக்க நேரிடும் என தினகரன் ஆதரவான எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியுள்ளார்.
இது குறித்து வெற்றிவேல் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், துணைப்பொதுச்செயலாளர் நினைத்தால் எதுவும் நடக்கும் என்று கூறியுள்ளார்.
ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி சரிதான். ஆனால் கட்சிக்கு சசிகலாவும், டிடிவி தினகரனும்தான். இப்படியே பேசிக்கொண்டிருந்தால் ஜெயக்குமாரின் பதவிகள் பறி போகும்.
எங்க அலுவலகத்திற்குப் போக யாருடைய தயவும் தேவையில்லை. அவர் கட்சி அலுவலகத்திற்க்குப் போவதை யாரும் தடுக்க முடியாது என்றும் வெற்றிவேல் கூறியுள்ளார். இனிமேல் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் பற்றி தினகரன் அறிக்கையாக வெளியிடுவார் என்றும் வெற்றிவேல் எம்எல்ஏ கூறியுள்ளார்.
இதனிடையே வெற்றிவேல் எம்எல்ஏவின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.