முதல்வர் நாற்காலியில் அமர பேராசைப்பட்ட சசிகலா.. வேட்டு வைத்த வித்யாசாகர் ராவ்!
தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட துடித்த சசிகலாவின் பேராசைக்கு வேட்டு வைத்தவர்தான் விடைபெற்று சென்றுள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தமிழகத்தின் முதல்வராக ஆக துடித்த சசிகலாவின் முயற்சியை முறியடித்தததில் பெரும் பங்கு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு இருக்கிறது.
ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் உடனிருந்தவர் சசிகலா. ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்திப்பதற்கு கூட சசிகலா அனுமதிக்கவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் யாரையும் ஜெயலலிதாவை பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை.
சிகிச்சை பலனளிக்கவில்லை
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா 75 நாட்களுக்கு பிறகு காலமானார். இதைத் தொடர்ந்து சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர். பின்னர் கட்சியும், ஆட்சியும் ஒருவரிடத்தில் இருக்க வேண்டும் என்கிற முழக்கம் எழுந்தது.
சசிகலா தேர்வு
இதையடுத்து முதல்வர் பதவியில் இருந்து ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். அதேநேரத்தில் சசிகலா அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபை குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூவத்தூர் முகாம்
இந்நிலையில் திடீரென ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து தம்மை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்துவிட்டார் சசிகலா என முறையிட்டார். சசிகலாவோ தமக்கே எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 122 பேரை கூவத்தூரில் சசிகலா சிறை வைத்துவிட்டு ஆளுநர் அழைப்பார் என காத்திருந்தார்.
விடாது கருப்பாய் சசிகலா
ஆனால் ஆளுநர் வித்யாசாகர் ராவோ சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்கவே இல்லை. சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கப் போகும் தீர்ப்புக்காக ஆளுநர் வித்யாசாகர் ராவ் காத்திருந்தார். ஆனால் ஒருநாளாவது முதல்வர் பதவியில் அமர்ந்து விடுவது என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் சசிகலா. இதனால் ஒருவார காலத்துக்கும் மேலாக எம்.எல்.ஏக்களுடன் கூவத்தூரிலேயே சசிகலாவும் முகாமிட்டார்.
சசிகலா கனவு டமால்
இந்நிலையில் பிப்ரவரி 14-ஆம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து சசிகலா சிறை செல்ல நேரிட்டது. சசிகலாவின் ஒருநிமிடமாவது முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்கிற கனவு மண்ணோடு மண்ணாகிப் போனது. உண்மையில் முதல்வராகிவிடுவது என சசிகலா வெறித்தனமாக வேஷம்கட்டி ருத்ரதாண்டவமாடியதை பொறுமையாக இருந்தே தடுத்தவர் சாட்சாத் விடைபெற்றுள்ள பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்தான்!