ஜெயலலிதா முன்னிலையில் அமைச்சராக பதவியேற்றார் விஜயபாஸ்கர்!
தமிழக அமைச்சரவையில் சில நாட்களுக்கு முன்பு சிறிய மாற்றம் செய்யப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி பள்ளி கல்வித்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.
அவருக்கு பதில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சாரக நியமிக்கப்பட்டார்.
புதிய அமைச்சர் பதவி ஏற்பு நிகழ்ச்சி கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று பகல் 12.30 மணி அளவில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா கவர்னர் மாளிகை வந்தார். அவரை அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.
விழாவுக்கு வந்த கவர்னர் ரோசய்யாவுக்கு முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் பதவி ஏற்பு நிகழ்ச்சி கவர்னர் மாளிகை மண்டபத்தில் நடந்தது. ஜெயலலிதா முன்னிலையில் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ரோசையா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவி ஏற்றதும் அவர் முதல்வர் ஜெயலலிதாவிடம் வாழ்த்துப் பெற்றார்.
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு மக்கள் நல்வாழ்வு, மருத்துவக்கல்வி, மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் சபாநாயகர் பி.தனபால், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மேயர் சைதை துரைசாமி, கொறடா மனோகரன் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அனைத்து அமைச்சர்களும் முதல்வர் ஜெயலலிதா, கவர்னர் ரோசைய்யா ஆகியோருடன் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
அமைச்சரவையில் விஜயபாஸ்கர் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து உள்ளது.