"வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது " ரயில்வே பட்ஜெட் குறித்து விஜயகாந்த் கருத்து
சென்னை: "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்கின்ற கருத்து தமிழகத்தில் மீண்டும் வலுப்பெறும் நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என்று ரயில்வே பட்ஜெட் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
2016-17ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான வரவேற்பும் அறிவிக்கடாத திட்டங்களுக்காக விஜயகாந்த் வருத்தமும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் 2016 - 2017ல் கட்டண உயர்வின்றியும், மக்களுக்கான இரயில் பயணத்தை மேம்படுத்தும் வகையிலும், தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி புதிய இரயில்வே திட்டங்களை துரிதமாக செயல்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் பாராட்டுக்குரியதாகும். அதிலும் குறிப்பாக இரயில் டிக்கெட் முன்பதிவில் மகளிருக்கென 33 சதவிகித இடஒதுக்கீடும், முதியோர்களுக்கான கூடுதல் சலுகையும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
இந்த இரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் பெரிதும் எதிர்பார்த்திருந்த திட்டங்கள் குறித்த அறிவிப்பு இல்லை என்பது வருத்தமளிக்கிறது. இந்தியாவில் முதன்முறையாக மோட்டார் வாகன தொழிற்சாலைகளுக்கான சரக்கு போக்குவரத்து மையம் சென்னையில் அமைப்பதாகவும், தமிழக அரசோடு இணைந்து புறநகர் இரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனவும், இரயில்வே மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி அறிவிப்பும் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இந்த திட்டங்கள் அறிவிப்போடு நின்றுவிடாமல் உடனடியாக செயல்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தமிழகத்தில் இரயில் போக்குவரத்து வளர்ச்சிக்கான சேலம் இரயில்வே கோட்டம் விரிவாக்கம் குறித்தோ, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் எதிர்பார்க்கப்பட்ட இரட்டை இரயில்பாதை திட்டமோ, மின்மயமாக்கல் திட்டமோ இந்த பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெறாதது தமிழக மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நிலையை காணும்போது "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்கின்ற கருத்து தமிழகத்தில் மீண்டும் வலுப்பெறும் நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என்று விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.