"அம்மா" இல்லாததால் தைரியமாக 'வெளியே' வந்த விஜயகாந்த்.. ஆளுநரை சந்தித்தார்!
சென்னை: உடல் நலம் சரியில்லை என்று கூறி வீட்டோடும், அதிகபட்சம் அவரது தலைமைக் கழக அலுவலகம் வரை மட்டுமே வந்து போய்க் கொண்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதா சிறைக்குப் போயுள்ள நிலையில் ராஜ்பவன் வரை இன்று வந்து போனார். ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்த அவர் தமிழக சட்டம் ஒழுங்கு நிலை குறித்து மனு ஒன்றையும் கொடுத்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, மத்திய பாதுகாப்புப் படையினரை நிறுத்த வேண்டும் என்று நேற்று விஜயகாந்த் அறிக்கை விட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை ஆளுநர் ரோசய்யாவைப் பார்க்க ராஜ்பவன் விரைந்து வந்தார் விஜயகாந்த். அவருடன் அவரது கட்சி எம்.எல்.ஏக்களும் கூட்டமாக வந்திருந்தனர்.
ஆளுநருடன், தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார் விஜயகாந்த். தமிழகம் முழுவதும் நேற்று அதிமுகவினர் மேற்கொண்ட தாக்குதல்கள், வன்முறை குறித்து அவர் ஆளுநரிடம் எடுத்துரைத்தார். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
சமீபத்தில் வெளிநாட்டுக்குப் போய் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பியிருந்தார் விஜயகாந்த். அதன் பின்னர் அவர் வீட்டை விட்டு வரவே இல்லை. கட்சி தலைமை அலுவலகத்திற்குக் கூட ஓரிருமுறைதான் வந்துள்ளார். அப்போதும் கைத்தாங்கலாக அவரை பிடித்தபடிதான் கூட்டி வந்தனர். மேலும் தனது வீட்டுக்கும் கூட பிற கட்சித் தலைவர்கள் வந்து சந்திப்பதைக் கூட முதலில் விஜயகாந்த் அனுமதிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதா சிறைக்குப் போயுள்ள நிலையில் புதுத் தெம்பும், புதுத் தைரியமும் அவருக்கு வந்துள்ளது போலத் தெரிகிறது.
இதே உத்வேகத்துடன் தொடர்ந்து சட்டசபைக் கூட்டத்திற்கும் அவர் போவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர் இந்த விஜயகாந்த்தான்.. ஆனால் இதுவரை அவர் செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் திமுகதான் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.