காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விஜய்காந்த் திட்டம்?: 14ம் தேதி பிரதமருடன் சந்திப்பு
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணியா, பாஜக அணியா என்று டேக்கா காட்டிய தேமுதிக தலைவர் விஜய்காந்த், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளி வருகின்றன.
தமிழகத்தில் அதிமுக-இடதுசாரிகள், திமுக- விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய தேசிய முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும், பா.ஜ.க- ம.தி.மு.க ஆகியவையும் இதுவரை கூட்டணி அமைத்துள்ளன.
பாஜக கூட்டணிக்கு பாமக வருமா என்பதும், பாஜக கூட்டணிக்கு தேமுதிக வருமா என்பதும் தான் இப்போதைய ஹாட் டாக். இந்த இரு கட்சிகளின் முடிவை வைத்தே இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டியா அல்லது 4 முனைப் போட்டியா அல்லது 5 முனைப் போட்டியா என்பது இறுதியாகும்.
காங்கிரஸ் கட்சி தனித்து விடப்படலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது அந்தக் கட்சி விஜய்காந்தை வளைக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தன்னை திமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளும் இழுக்க முயல்வதால் முதலில் திமுகவை தாக்கி கூட்டணி இல்லை என்ற நிலையை விஜய்காந்த் தரப்பு உருவாக்கியது.
அடுத்ததாக பாஜகவை தொங்கலிலேயே வைத்துக் கொண்டு காங்கிரஸ் தரப்புடன் தீவிர பேச்சு நடத்தி வருகிறது தேமுதிக என்கின்றனர்.
பாஜகவிடம் அதிகபட்ச தொகுதிகளைக் கேட்டு அவர்களை அலற வைத்த கேப்டன், இப்போது தனது பார்வையை காங்கிரஸ் பக்கம் திருப்பியுள்ளதாகத் தெரிகிறது. தே.மு.தி.கவை காங்கிரஸ் இழுக்கத் தொடங்கியுள்ளது என்கின்றார்கள்.
தனிப்பட்ட முறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்தான் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியபோது எப்படியாவது பாஜகவுடன் விஜய்காந்த் போய்விடாமல் தடுக்குமாறு கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து வாசன், ப.சிதம்பரம் போன்ற பெருந்தலைகள் தலைகள் விஜய்காந்த் தரப்புடன் அடுத்தடுத்துப் பேசியதன் விளைவாக காங்கிரசை நோக்கி தேமுதிக நகர்வதாகத் தெரிகிறது.
விஜயகாந்த்தை டெல்லிக்கு வருமாறு ராகுல் காந்தி தரப்பு அழைத்துள்ளது. இதையடுத்து விஜயகாந்த், சுதீஷ், பிரேமலதா மூவரும் வரும் 14ம் தேதி டெல்லி செல்கின்றனர்.
அங்கு காலை 11 மணிக்கு அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச உள்ளனர். இதற்கான நேரத்தை பிரதமர் அலுவலகம் ஒதுக்கிக் கொடுத்துவிட்டது.
அப்போது இலங்கை விவகாரம், மீனவர் விவகாரத்தில் தேமுதிக சில கோரிக்கை வைக்கும் என்றும், அதை ஏற்பதாக மத்திய அரசு அறிவிக்கும் என்றும் தெரிகிறது. மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுவிட்டது, எல்லா பிரச்சனையும் தீரப் போகிறது என்று எதையாவது சொல்லிவிட்டு ராகுலை விஜய்காந்த் தரப்பு சந்திக்கலாம் என்கிறார்கள்.
டெல்லிக்கு செல்லும் முன் 13ம் தேதி தனது எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சென்னையில் வைத்து சந்திக்கவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். அப்போது காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக எம்.எல்.ஏக்களிடம் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது. இதில் சில எம்எல்ஏக்களை டெல்லிக்கு அழைத்துச் செல்லவும் விஜய்காந்த் திட்டமிட்டுள்ளார்.