ம.ந.கூ. தலைவர்களின் 'விடாது கருப்பு' முயற்சி.... கதவை திறக்க மறுக்கும் விஜயகாந்த்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிகவை வளைத்துப் போட மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை சந்திக்கவே முடியாது தேமுதிக தலைவர் விஜயகாந்த் அடம்பிடித்து வருவதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் திமுக, பாஜக கட்சிகளுக்கு போக்கு காட்டிவிட்டு திடீரென மக்கள் நலக் கூட்டணியுடன் கை கோர்த்தது தேமுதிக. இதனால் அக்கட்சி உடைந்து மக்கள் தேமுதிக உதயமானது.
தேர்தலில் ம.ந.கூ- தேமுதிக அணி படுதோல்வி அடைந்தது. உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் டெபாசிட்டையே பறிகொடுத்தார். இது தேமுதிகவை படுபயங்கரமாக கலகலக்க வைத்துவிட்டது. விஜயகாந்துக்கு எதிராக 14 மாவட்ட செயலர்கள் போர்க்கொடி தூக்கியதுடன் அதிமுகவிடம் இருந்து பணம்பெற்றுக் கொண்டே மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றதையும் அம்பலப்படுத்தினர்.
தற்போது உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடியாது என விஜயகாந்த் கூறி வருவது அக்கட்சியினரை மிகக் கடுமையாக அதிருப்தி அடைய வைத்துள்ளது. வழக்கம் போல குழப்பமாக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி; தேமுதிக தலைமையை ஏற்கும் கட்சிகள் பேசலாம் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனைப் பயன்படுத்தி மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை சந்திக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் விஜயகாந்தோ, அவர்களை சந்திக்கவே விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.