திமுகவுடன் உறவு இல்லை- தேமுதிக தனித்துப் போட்டியா? பாஜகவுடன் கூட்டணியா?
சென்னை: திமுகவின் உட்கட்சி மோதலை நாடகம் என விமர்சித்து அக்கட்சியுடனான கூட்டணி யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. இதையடுத்து தேமுதிக பாஜகவுடன் கூட்டணி அமைக்குமா? அல்லது தனித்துப் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தாலும் இடதுசாரிகளுக்கு தலா ஒரு தொகுதியை கொடுத்துவிடும் என்று கருதப்படுகிறது. காங்கிரஸ்- பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திமுக திட்டவட்டமாக அறிவித்தது.
அதன் பின்னர் தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுகள் நடைபெற்றன. ஆனால் திமுக- தேமுதிக கூட்டணி உருப்படாது என்று திமுக தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்த மு.க. அழகிரி விமர்சித்திருந்தார். இதைத் தொடர்ந்து திமுக- தேமுதிக கூட்டணி உருவாகுமா என்ற கேள்வி எழுந்தது.
தேமுதிக- திமுக உறவு
இதற்குப் பின்னரும் தேமுதிகவுக்கு திமுக அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தது. அத்துடன் தேமுதிகவை விமர்சித்த மு.க. அழகிரியையும் கட்சியில் இருந்து தற்காலிகமாக திமுக நீக்கியது. இதனால் தேமுதிக- திமுக கூட்டணி உருவாகலாம் என்ற நிலை இருந்தது.
முற்றுப்புள்ளி வைத்த பிரேமலதா
ஆனால் உளுந்தூர்பேட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, திமுகவை நேரடியாக தாக்கிப் பேசினார். திமுகவில் நடைபெறும் உள்மோதல் நாடகம் என்று காட்டமாக விமர்சித்தார். இதனால் திமுக- தேமுதிக கூட்டணி உருவாக வாய்ப்பில்லை என்பது உறுதியாகிப் போனது.
3 வாய்ப்புகள்
இதைத் தொடர்ந்து தேமுதிக அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. தேமுதிகவைப் பொறுத்தவரையில் 3 வாய்ப்புகள் தற்போது அக்கட்சியிடம் இருக்கிறது.
தேமுதிக என்ன செய்யும்?
பாஜகவுடன் கூட்டணி அமைப்பது, தனித்துப் போட்டியிடுவது அல்லது ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்ற 3 வாய்ப்புகள் தேமுதிக முன் இருக்கிறது.
பாஜகவுடன் கூட்டணி?
பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் எப்படியும் தேமுதிக தங்களது அணிக்கு வந்துவிடும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்து வருகிறது. தேமுதிகவிலும் இதே கருத்துதான் முன்வைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கவே வாய்ப்பு அதிகம் என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.