தேமுதிகவின் பொதுச்செயலாளரானார் ‘கேப்டன்’ விஜயகாந்த்!
சென்னை: தேமுதிகவின் பொதுச் செயலாளர் எனத் தன்னைக் குறிப்பிடத் தொடங்கியுள்ளார் இதுவரை நிறுவனத் தலைவர் எனக் கூறப்பட்டு வந்த நடிகர் விஜயகாந்த்.
தமிழகத்தின் மின்வெட்டு, குடிநீர் பஞ்சம், ஈழத் தமிழர் பிரச்சனை, மீனவர் விவகாரம் என 9 முக்கிய பிரச்சனைகளை சுட்டிக்காட்டி தீர்வு காணக் கோரி நேற்று திடீரென பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார் விஜயகாந்த்.
அந்த கடிதத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளும் பணிகளை கண்காணிக்க, எதிர்க்கட்சியை உள்ளடக்கிய கூட்டுக் குழு ஒன்றையும் அமைக்கவும் விஜயகாந்த் வலியுறுத்தியிருந்தார்.
அதில்தான் முதல் முறையாக தன்னை தேமுதிக பொதுச் செயலாளர் என விஜயகாந்த் குறிப்பிட்டிருந்தார். இதற்கு முந்தைய அறிக்கைகளில் எல்லாம் தன்னை தேமுதிக நிறுவனத் தலைவர் என்றே குறிப்பிட்டு வந்தார் விஜயகாந்த்.
இந்நிலையில், நேற்றைய கடிதத்தில் தன்னை தேமுதிகவின் பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டுள்ளார் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக் கோளாறால் மரணமடைந்தார் தேமுதிக பொதுச் செயலாளராக இருந்த ராமு வசந்தன்.
அதனைத் தொடர்ந்து அப்பதவி வேரு யாருக்கும் கொடுக்கப் படாமல் காலியாகவே இருந்தது. இந்நிலையில், தற்போது தன்னை முதல் முறையாக தேமுதிக பொதுச்செயலாளர் என விஜயகாந்த் கூறத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.