ஊர் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு - காட்டில் குடியேறிய மக்களின் தொடரும் போராட்டம்!!
நெல்லை: திருநெல்வேலி அருகே ஊர் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 நாட்களாக காட்டில் குடியேறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் யூனியனுக்குட்பட்டது யாக்கோபுரம்-சிதம்பரபுரம். இந்த ஊர் பெயர்களை பயன்படுத்துவது தொடர்பாக அப்பகுதியில் இரு தரப்பினரிடையே பிரச்சினை உள்ளது. இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று யாக்கோபுரம் 2-வது வார்டு பகுதிகளில் உள்ள போர்டுகளில் சிதம்பரபுரம் என பெயர் எழுதி கொள்ளலாம் என கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டாராம். இதற்கு யாக்கோபுரம் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காட்டில் குடியேறிய மக்கள்
இதையடுத்து அவர்கள் இன்று காலை அங்குள்ள மங்களம் காட்டுப்பகுதியில் குடும்பத்துடன் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை.
பெயர் மாற்றுவதா?
வள்ளியூர் யூனியனுக்குட்பட்ட யாக்கோபுரம் கடந்த 150 வருடங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டது. சிதம்பரபுரம் கடந்த 15 வருடத்திற்கு முன்புதான் உருவாக்கப்பட்டது. இதனால் நாங்கள் யாக்கோபுரம் என்றே அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம் என்று முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர்கள் ஆர்தர்செல்வகுமார், செல்லத்துரை கூறியுள்ளனர்.
ரேசன்காட்டுகளை ஒப்படைப்போம்
இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலெக்டர் யாக்கோபுரம் 2-வது வார்டு பகுதியை சிதம்பரபுரம் என மாற்றியுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கோரி காட்டில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டைகளை ஒப்படைத்து போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர்.
கைவிட மறுப்பு
பொதுமக்கள் போராட்டத்தையடுத்து வள்ளியூர் டி.எஸ்.பி. பாலாஜி மற்றும் போலீசார், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.
குடும்பத்தோடு காட்டில்
போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் நேற்றிரவு பாய், தலையணையுடன் அங்கேயே படுத்து தூங்கினர். அங்குள்ள மரங்களில் தொட்டில் கட்டி குழந்தைகளை தூங்க வைத்தனர்.
மழையிலும் போராட்டம்
தொடர்ந்து இன்று 2-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். நேற்றிரவு சாரல் மழை பெய்த போதிலும் அதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.