விழுப்புரம் திமுக துணைச் செயலாளர் சஸ்பெண்ட்... பொன்முடிக்கு எதிராக செயல்பட்டவர்!
விழுப்புரம்: விழுப்புரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் பொன்முடிக்கு எதிராக செயல்பட்டு வந்த, அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் புஷ்பராஜ் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் பொன்முடி. இவருக்கு ஆதரவாளராக இருந்து வந்தவர் துணைச் செயலாளர் புஷ்பராஜ். இவர் தனக்கு கடந்த லோக்சபா தேர்தலில் சீட் மறுக்கப் பட்டதைத் தொடர்ந்து பொன்முடிக்கு எதிராக செயல்படத் தொடங்கினார்.
இதனால், பொன்முடிக்கும், புஷ்பராஜூக்கும் இடையே பனிப்போர் நடந்து வந்தது. திமுக தலைவர்கள் யாராவது விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் போது, இவர்கள் இருவரும் தனித்தனியாக வரவேற்பு அளித்து வந்தனர்.
ஒருவர் அடிக்கும் போஸ்டர்களில் மற்றவர் பெயரை போடாமல் ஒதுக்கி வந்தனர். அதேபோல், கட்சி தலைமை எல்லா மாவட்டத்திலும் போராட்டம் நடத்த அறிவுறுத்தியதையடுத்து, மாவட்ட செயலாளர் பொன்முடியை அழைக்காமல் தனியாகவே போராட்டம் நடத்தினார் புஷ்பராஜ்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட திமுகவின் உட்கட்சி தேர்தல் கடந்த 2ஆம் தேதி நடந்தது. இதில், மேலிடத்தில் இருந்து வந்த ஆணையர்கள் பொன்முடிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், தோல்வியடைந்த பொன்முடி ஆதரவாளர்களை வெற்றி பெற்றதாக அறிவித்தாகவும் கூறி புஷ்பராஜ் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதையடுத்து, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து புஷ்பராஜை தற்காலிகமாக நீக்கி கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு புஷ்பராஜூக்கு கடிதமும் அனுப்பப் பட்டுள்ளது.
இந்தக் கடிதத்திற்கு ஒரு வார காலத்திற்குள் புஷ்பராஜ் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அவர் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப் படுவார் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.