அதிமுக மூத்த தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன் காலமானார்
அதிமுக அமைப்புப் செயலாளராக பதவி வகித்து வந்த விசாலாட்சி நெடுஞ்செழியன் இன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
சென்னை : மறைந்த முன்னாள் நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் 93 வயதில் உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
விசாலாட்சி நெடுஞ்செழியனுக்கு மதிவாணன் என்ற மகன் உள்ளார். இவரது மருமகள் கல்யாணி மதிவாணன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பதவி வகித்தார்.
நவாலர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் 93 வயது வரையிலும் அதிமுகவிற்காக உழைத்து வந்தார். கடந்த 15 நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் விசாலாட்சி நெடுஞ்செழியன், இன்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு காலமானார்.
2001ல் ஜெயலலிதா, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதும், ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் கிடைத்திருந்த தண்டனையால், அவர் நீதிமன்ற உத்தரவால் முதல்வர் பதவியிலிருந்து விலக நேரிட்டது. ஜெயலலிதாவுக்கு பதிலாக வேறு யாரை முதல்வராக நியமிக்கலாம் என்ற ஆலோசனை நடந்த போது, மூத்த தலைவர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் பெயர் ஜெயலலிதாவால் இறுதி செய்யப்பட்டது. அந்த அளவிற்கு கட்சியில் செல்வாக்கு பெற்றவராகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார் விசாலாட்சி நெடுஞ்செழியன்.