ஐடி ரெய்டு: அதிகாரிகள் கிடுக்கிப் பிடி... 3 நாட்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிய விவேக்
ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரியான விவேக் வீட்டில் 3 நாள்களாக ரெய்டு நடப்பதால் யாரும் வீட்டை விட்டு வெளியேறாமல் முடங்கியுள்ளனர்.
சென்னை: ஜெயா டிவியின் சிஇஓவும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமன் வீட்டில் 3 தினங்களாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். விவேக் குடும்பத்தினர் யாரையும் வீட்டை விட்டு வெளியேற அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்பதால் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
சசிகலா குடும்பத்தினரையும் அவரது ஆதரவாளர்கள், நெருக்கமானவர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் வருமான வரி துறையினர் ஒரே நேரத்தில் 190 இடங்களில் தங்கள் சோதனையை கடந்த வியாழக்கிழமை தொடங்கினர்.
இதில் பிரதானமான விஷயம் என்னவென்றால் விவேக் ஜெயராமனின் வீட்டிலும், அவரது கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி அலுவலகமும் சோதனை வளையத்தில் சிக்கியுள்ளது.

3 தினங்களாக வீட்டுக்குள்ளே முடக்கம்
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக்கின் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் கடந்த 3 தினங்களாக விவேக், அவரது மனைவி கீர்த்தனா உள்ளிட்ட 4 பேர் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். அவர்கள் வெளியே போகவும் வெளியே உள்ளவர்கள் வீட்டுக்குள் செல்லவும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை

ஆதரவாளர்கள் தகராறு
விவேக்கின் வீட்டில் கடந்த வியாழக்கிழமை சோதனை நடைபெற்றபோதே அன்றிரவு அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகளுடன் தகராறு செய்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு விவேக்கின் வீட்டுக்கு வரும் ஆதரவாளர்களைத் தடுக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்டபட்டுள்ளனர்.

விவேக் என்ன செய்தார்
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் தினகரன்தான் என்றாலும் அது தொடர்பான அனைத்து பணிகளையும் செய்வது விவேக் என்று தெரியவந்துள்ளது. மேலும் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கு, சசிகலா சிறையில் லஞ்சம் கொடுத்த விவகாரம் என அனைத்திலும் விவேக் பெரும் பங்காற்றியுள்ளார் என்பது அதிகாரிகளின் சந்தேகம் ஆகும்.

சசிகலாவுக்கு உதவி
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா கூடுதல் சலுகைகள் பெறுவதாகவும், அவர் வெளியே ஷாப்பிங் சென்றது, பிடித்தமான உணவுகளை சமைக்க ஏற்பாடு என அனைத்து விவகாரங்களிலும் விவேக் தான் காரணகர்த்தா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் விவேக் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நிகழ்த்தினால் அதற்கான ஆதாரங்கள் கிடைக்கும் என நம்புகின்றனர்.

அப்பல்லோ வீடியோ
ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேக கேள்விகள் எழுந்த போதெல்லாம் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக விவேக்கும் கூறினார். எனவே விவேக்கிற்கு கிடுக்கிபிடி போட்டால் ஏதேனும் உண்மைகள் தெரியவரும் என்பதே வருமான வரித் துறையின் கணக்கு. அதனால்தான் ஐடி துறையின் ஒட்டுமொத்த பார்வையும் விவேக்கின் மீது திரும்பியுள்ளது.












Click it and Unblock the Notifications