ஓட்டுப் போட மாட்டோம்.. போய்ட்டு வாங்க போஸ்.. திருப்பரங்குன்றம் வாக்காளர்கள் அதிரடி!
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரம் செய்ய சென்ற அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ், அமைச்சர் உதயக்குமார் ஆகியோரை மக்கள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதியில் ஓட்டு கேட்டுச் சென்ற அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸையும், அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்டோரையும் மக்கள் தங்களது பகுதிக்குள் விட மறுத்து திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ் போட்டியிடுகிறார். அவருக்கு அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்தான் சீட் வாங்கிக் கொடுத்து சப்போர்ட்டாக இருக்கிறார். இந்த நிலையில் போஸுக்கு ஆதரவாக உதயக்குமார் உள்ளிட்டோர் நேற்று பிரசாரம் செய்தனர்.

நேற்று இரவு கல்லம்பல் என்ற கிராமத்திற்கு பிரசாரத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களை ஊருக்குள் விடாமல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானம் அடையவில்லை.
எங்களது கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர் விநியோகம் இல்லை. சாலை கிடையாது. பஸ்ஸும் கிடையாது. கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 3 மாதமாக குடிக்க தண்ணீர் இல்லை. பலமுறை இது குறித்து அரசு அதிகாரிகள், அலுவலங்களில் பல புகார்கள் அளிக்கப்பட்டு விட்டன. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டு வாங்க, ஓட்டுப் போடுகிறோம். அதுவரை ஓட்டுப் போட மாட்டோம் என்று கூறி விட்டனர். கடும் எதிர்ப்பு நிலவியதால் அதிமுகவினர் உள்ளே போக முடியவில்லை. திரும்பிச் செல்ல நேரிட்டது. திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களின் இந்த விரட்டியடிப்பால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications