திமுகவில் நடக்கும் நாடகத்தை பொறுமையாக இருந்து பார்ப்பேன்: மு.க.அழகிரி
மதுரை: தி.மு.க. தலைமை ராஜினாமா நாடகத்தை நடத்தி முடித்துள்ளது. கட்சியில் நடக்கும் நாடகங்களை பொறுமையாக இருந்து பார்ப்பேன் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்தது. இந்த நிலையில் மதுரையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் கட்சி தலைமையை விமர்சித்து மீண்டும் சுவரொட்டி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியதாக நேற்று தகவல் வெளியானது.
கட்சித்தலைமையை கைப்பற்ற
இது தொடர்பாக மதுரையில் மு.க.அழகிரி கருத்து தெரிவிக்கையில், தி.மு.க. தலைமையை கைப்பற்ற மு.க.ஸ்டாலின் ராஜினாமா நாடகம் ஆடுகிறார் என்றும், இந்த நாடகம் காலையில் ஒத்திகை நடத்தி மாலையில் அரங்கேற்றுவது போன்றது. கட்சி தலைமையை கைப்பற்ற அவரது ஆலோசகர்கள் இப்படி ஒரு திட்டத்தை கூறியிருக்கலாம். அதன் அடிப்படையில் ஸ்டாலின் செயல்படுகிறார். எனவே கட்சி தலைவர் கருணாநிதி சீர்படுத்திட முன்வர வேண்டும் என்று கூறியிருந்தார்.
ராஜினாமா நாடகமா?
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இது தொடர்பாக பதிலளிக்கையில் மு.க.ஸ்டாலின் ராஜினாமா கடிதம் கொடுத்திருப்பதாக கூறப்படுவது பொய் என்றும், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக மட்டும் என்னிடம் வந்து சொன்னார். ஆனால் பின்னர் தனது முடிவை ஸ்டாலின் மாற்றிக் கொண்டார் என்று தெரிவித்திருந்தார்.
அழகிரி இருக்கும் போதே...
மு.க.அழகிரி தெரிவித்த கருத்து தொடர்பாக கருணாநிதியிடம் கேட்டபோது, மு.க.அழகிரியை நானும், தி.மு.க.வும் மறந்து பல நாட்கள் ஆகின்றன. அவர் தி.மு.க.வில் இருக்கும்போதே இரண்டு, மூன்று முறை தி.மு.க. படுதோல்வி அடைந்திருக்கிறது.
மறந்து நாளாகிவிட்டது
எனவே அவரை பற்றி இனியும் பேச விரும்பவில்லை. நான் முன்பே கூறியதுபோல் அவரை நான் மறந்து நீண்ட நாட்களாக ஆகிறது என்று தெரிவித்திருந்தார்.
நடந்த நாடகம்
நான் ஏற்கனவே கூறியது போல ஒரு நாடகத்தை தி.மு.க. தலைமை நடத்தி முடித்துள்ளது. ஸ்டாலினுக்கு ஆதரவாக முன்னுக்குப்பின் முரணான முடிவுகளை எடுப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள்.
பொறுமையாக பார்க்கிறேன்
கருணாநிதியும், துரைமுருகனும் தான் நாடகத்தை முடித்து வைத்துள்ளனர். கட்சியில் நடக்கும் நாடகங்களை பொறுமையாக இருந்து பார்ப்பேன். எனது ஆதரவாளர்களை மீண்டும் சந்தித்து ஆலோசனை கேட்பது தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.