கடும் வறட்சி எதிரொலி - அடர்ந்த வனத்தில் சப்தகன்னியருக்கு சிறப்பு பூஜை
கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள், சப்த கன்னியருக்கு சிறப்பு பூஜைகள் செய்து மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளாகப் பருவமழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் மழை வேண்டி அடர்ந்த வனத்தில் சப்தகன்னியருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தாமிரபரணியின் துணை நதிகளில் ஒன்றான மணிமுத்தாறில் தற்போது 35 அடிக்குதான் தண்ணீர் உள்ளது. பாபநாசம், குற்றாலம் வனப்பகுதியில், வழக்கமாகப் பெய்யும் மழை அளவு கூட பெய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சப்த கன்னியருக்கு அருவி தலை பூஜை நடத்த பொது மக்கள் முடிவு செய்தனர். வனத்துறை அனுமதியுடன் சிங்கப்பட்டி, அயன்சிங்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளை சேர்ந்த 250 பேர் பூஜைக்காக 20 அர்ச்சகர்களை அழைத்து கொண்டு காட்டுக்கு புறப்பட்டனர்.

அடர்ந்த காடு
இந்த தலையருவிக்கு, மணிமுத்தாறை கடந்து மாஞ்சோலை காவல் நிலையம் அருகே தலையணை வழியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் தான் செல்ல வேண்டும். மழை இல்லா காலத்தில் தான் இங்குப் பூஜை நடத்தப்படும் என்பதால் அப்பகுதியில் சரியான பாதைகள் கிடையாது.

6 மணி நேரப் பயணம்
செடி, கொடிகளை அப்புறப்படுத்தித் தான் செல்ல வேண்டும். அட்டைப்பூச்சிக் கடி, காட்டு விலங்குகள் அச்சுறுத்தலைக் கடந்துதான் தலையருவி செல்ல முடியும். இந்தச் சூழ்நிலையில், அவர்கள், சுமார் 6 மணி நேரம் நடந்து தலையருவியை அடைந்தனர்.

சப்த கன்னியர் பூஜை
அங்கு முதலில் அர்ச்சகர்கள் தாமரை மலரால் சப்த கன்னிகளை வடிவமைத்து 7 வண்ண துணி வைத்து, சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்தனர். அர்ச்சர்கள் வழிபாடு முடிந்து சப்த கன்னியர்களை வரவழைக்கும் விரத வழிபாடு துவங்கியது.

ஆடு பலி
இதற்காகப் பக்தர்களால் கொண்டு வரப்பட்ட ஆட்டுக் கிடா தலை அறுக்கப்பட்டு அதன் ரத்தம் முழுவதும் பாறையிலும், ஒரு பாத்திரத்திலும் விழும்படி செய்யப்பட்டது. பின்னர் அப்பகுதியில் இருந்த பாறை முழுவதும் ரத்தம் தெளித்து விடப்பட்டது.

மழை பொழியும்
பின்னர் ஆட்டின் தலைக்கு சிறப்பு பூஜை செய்து அந்தத் தலையை அருவியில் விட்டனர். வழக்கமாகப் பூஜை நடக்கும் அன்று இரவு தான் மழை பெய்ய தொடங்கும். ஆனால் பூஜை தொடங்கும் முன்பே மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் உற்சாகம் அடைந்தனர். இனி தொடர்ந்து மழை பெய்யும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications