சுதந்திரமாகத்தான் தங்கியிருக்கிறோம்.. வெளியில் விடப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் விளக்கம்!
எங்களை யாரும் கடத்தவில்லை எங்களின் சுய விருப்பத்தின் பேரில் சுதந்திரமாக சொந்த செலவில் ரிசார்ட்ஸ்சில் தங்கியிருப்பதாக அதிமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்ஸ்சில் நாங்கள் சுதந்திரமாக சொந்த விருப்பத்தின் பேரில் தங்கியிருப்பதாக அதிமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளித்துள்ளனர். எங்களை யாரும் கடத்தவில்லை என்றும் அதிமுக எல்எல்ஏக்கள் விளக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து ஓ.பன்னீர் செல்வம் நடத்திய மவுனப்புரட்சி தமிழக அரசியல் களத்தையே கிடுகிடுக்க வைத்துள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் அரியணையில் அமரப்போவது யார் என்பதுதான் இப்போதைய கேள்வி.
சசிகலா முதல்வராகக்கூடாது என்று தொண்டர்கள் நினைத்தாலும் நிர்வாகிகள் அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் சசிகலா முதல்வராக வேண்டும் என்று விரும்புகின்றனர். நான் முதல்வராக பதவியேற்பேன் என்று உறுதியாக கூறி வருகிறார் சசிகலா. அதற்கேற்ப காய் நகர்த்த தொடங்கியுள்ளார்.
தனக்கு ஆதரவு அளித்துள்ள எம்எல்ஏக்களை பாதுகாப்பாக கொண்டு போய் தீவு போல உள்ள ரிசார்ட்ஸ்சில் அடைத்து வைத்துள்ளார். எம்எல்ஏக்கள் தப்பிச்செல்லாமல் இருக்க குண்டர்களையும் காவல் வைத்துள்ளாராம் சசிகலா. எந்த தகவல் தொடர்பும் இன்றி அதிமுக எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்ஸ்சில் ஏகப்பட்ட வசதிகள் உள்ளன. இங்கே பொழுதை போக்கி வரும் எம்எல்ஏக்கள் வாய்க்கு ருசியான உணவு, கண்களுக்கு குளிர்ச்சியாக நடனம் என அனுபவி ராஜா அனுபவி என்று திகட்ட திகட்ட அளிக்கப்படுகிறதாம்.
இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது எம்எல்ஏக்கள் எங்கே என்று உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்ப, அரசு வழக்கறிஞரோ, அரசு சட்டமன்ற விடுதியில் இருப்பதாக கூறினார். இன்றோ எங்கே இருக்கிறார்கள் என்று கூறி பல்டி அடித்தார் அரசு வழக்கறிஞர்.
இதனையடுத்து எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ரிசார்ட்ஸ்க்கு சென்று காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் திடீரென கூவத்தூர் பகுதியில் கெடுபிடிகள் குறைக்கப்பட்டன. ஜாம்மர் கருவி அகற்றப்பட்டது. இந்த நிலையில் திடீரென ஒவ்வொரு எம்எல்ஏக்களாக வந்து பேட்டி அளித்து வருகின்றனர்.
நாங்கள் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம். எங்களுக்கு அதிக அளவில் செல்போன் அழைப்புகள் வருவதால் நாங்கள் சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருப்பதாக தெரிவித்தார் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறன். மேலும் அவர் நாங்கள் பொழுது போக்குவதற்காக வந்து தங்கியிருக்கிறோம். இப்போது பாண்டிச்சேரி போய் மணக்குள விநாயகரை தரிசனம் செய்து விட்டு வந்து மீண்டும் தங்கிக் கொள்வேன் என்றார்.
நாங்கள் நினைத்ததை சாப்பிடுகிறோம். நன்றாக சுதந்திரமாக இருக்கிறோம் எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் கூறினார் எம்எல்ஏ முருகுமாறன்.