அதிமுக மீது மக்கள் கோபம்.. மிக மிக தைரியமாக தேர்தலை அணுகுகிறோம்.. அன்புமணி
சென்னை: அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்று பாமக தான் என்று மக்கள் மனதில் முடிவு செய்து இருக்கிறார்கள். 85 சதவீத இளைஞர்களின் ஆதரவு பாமகவுக்கு உள்ளது. இது நாங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஊழல், நிர்வாக திறமையின்மை, வெற்று அறிவிப்புகளால் அதிமுக மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். எனவே நாங்கள் மிக மிக தைரியத்துடன், அதிக தன்னம்பிக்கையுடன் தேர்தலை அணுகுகிறோம் என்று பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமகவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னையில் நடத்தப்பட்டது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி, அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் வெள்ளைத் தாள் கொடுக்கப்பட்டு, அதில் தங்களது தொகுதியில் பாமகவின் செல்வாக்கு எப்படி என்பது குறித்தும் பிற விவரங்கள் குறித்தும் தெரிவிக்கும்படி டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். கட்சி நிர்வாகிகளும் எழுதிக் கொடுத்தனர்.
பின்னர் அன்புமணி செய்தியாளர்களிடம் பேசினார். அவரது பேட்டியிலிருந்து...
60 நாட்கள்
இன்னும் தேர்தலுக்கு 60 நாட்கள் மட்டும் இருக்கும் சூழ்நிலையில் எங்கள் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் பேசினோம். பாமகவின் சாதகமான அரசியல் சூழ்நிலை பற்றி பேசினோம். கட்சி நிர்வாகிகள் உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.
மாற்று நாங்கள்தான்
அதிமுக., திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்று பாமக தான் என்று மக்கள் மனதில் முடிவு செய்து இருக்கிறார்கள். 85 சதவீத இளைஞர்களின் ஆதரவு பாமகவுக்கு உள்ளது. இது நாங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மிக மிக தைரியத்துடன்
மிக மிக தைரியத்துடன், அதிக தன்னம்பிக்கையுடன் தேர்தலை அணுகுகிறோம். ஊழல், நிர்வாக திறமையின்மை, வெற்று அறிவிப்புகளால் அதிமுக மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.
அதிமுக படு தோல்வி அடையும்
1996ம் ஆண்டு தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது. அதேநிலை இந்த தேர்தலில் அதிமுவுக்கு ஏற்படும். அதேபோன்று திமுக. மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். கடந்த 2 தேர்தலில் தி.மு.க. 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
யாரும் ஏற மாட்டார்கள்
பாதாளத்தில் இருக்கும் திமுக மூழ்கும் கப்பல். யாரும் ஏறுவதற்கு தயங்குகிறார்கள். இந்த தேர்தலில் நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். பா.ம.க.வால் தான் மதுவை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை பெண்களிடம் உள்ளது.
லெட்டர் பேடுகளை கூப்பிட்டுப் பேசும் ஜெ.
3 மாதங்களுக்கு முன்பு கண்ணுக்கு தெரிந்த தூரம் வரை எதிரிகளே இல்லை என்று சொன்ன ஜெயலலிதா தற்போது சிறுசிறு கட்சிகள் என்று கூட சொல்ல மாட்டேன், லெட்டர் பேடு கட்சிகளை அழைத்து பேசி இருக்கிறார்.
ஸ்டாலின் பேச்சு வேடிக்கை
அதேபோல திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 19 இயக்கங்கள் ஆதரவு என்கிறார். வேடிக்கையாக இருக்கிறது. பாமக தேர்தல் அறிக்கை இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் உள்ளது. விரைவில் வெளியிடப்படும். வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது என்றார் அன்புமணி.