இப்ப சீட் கிடைக்கலைதான்.. எதிர்காலத்தில் நல்லது நடக்கும்.. ஏமாற்றம் மறையும்: சரத்குமார்
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். இருப்பினும் எதிர்காலத்தில் நல்லது நடக்கும் போது ஏமாற்றங்கள் மறைந்துபோய்விடும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
ஜூனியர் விகடன் வாரம் இருமுறை ஏட்டுக்கு நடிகர் சரத்குமார் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
'கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தே.மு.தி.க., புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, ச.ம.க. ஆகியவை இருந்தன. இப்போது ச.ம.க. உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே கூட்டணியில் உள்ளன. கூட்டணியில் இடம் பெற்றால் ஐந்து ஆண்டுகள் அதில் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.
அதிமுகவுக்கு பாராட்டு
சந்தர்ப்பவாதத்தால் கூட்டணிக் கட்சிகள் பிரிந்துவிட்டன. ஆனால், மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை நம்பி இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடுவது பாராட்டுதலுக்குரியது.
கொள்கைப் பிடிப்பு..
அ.தி.மு.க. வெற்றிக்கு ச.ம.க. உறுதுணையாக இருக்கும். இந்தக் கூட்டணியில் கொள்கைப் பிடிப்புடன் இருக்கிறோம்.
சீட் கிடைக்கும்னு நினைச்சோம்..
கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகியபோது ச.ம.க-வுக்கு நிச்சயம் சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் இருந்தது. எதிர்பார்ப்புகள் இருக்கும் இடத்தில்தான் ஏமாற்றமும் இருக்கும்.
எதிர்காலத்தில் நல்லது நடக்கும்..
எதிர்காலத்தில் நல்லது நடக்கும்போது ஏமாற்றங்கள் மறைந்துவிடும். மக்களுக்குச் சேவை செய்யவே இந்தக் கூட்டணியில் தொடர்கிறோம். இந்தத் தேர்தலில் ச.ம.க. போட்டியிடவில்லை.
மோடி நல்லவர்தான்..
குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்து சென்றவர் மோடி என்பதில் சந்தேகமில்லை. அதனால் குஜராத்தில் செய்ததை இந்தியா முழுதும் செய்ய முடியுமா?
மோடிக்கு நிகரானவர் ஜெயலலிதா
இந்தத் தேர்தலில் எதிரணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி வீக்காக உள்ளது. அந்தக் கட்சியில் பிரதம வேட்பாளராகக் கருதப்படும் ராகுல் காந்தியை ஒப்பிடும்போது மோடி சிறந்தவர். அதே நேரத்தில் தெற்கில் மோடிக்கு நிகரானவர் ஜெயலலிதாதான்.
ஜெ. பிரதமராவது உறுதி
தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது அணி உருவாகி, தொங்கு நாடாளுமன்றம் அமையும்போது நிச்சயம் ஜெயலலிதாவுக்குத்தான் பிரதமராகும் தகுதி உண்டு
இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.