துக்க வீட்டிலும் "வெறுப்பு.." இது எங்கே போய் முடியுமோ.. பாஜக செய்தது இதுதான்! ஆனந்த் சீனிவாசன் வேதனை
சென்னை: தமிழ்நாட்டின் முக்கிய பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன், பாஜகவைக் கடுமையாக விமர்சிக்கும் வகையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பொருளாதாரம் குறித்து தொடர்ச்சியாகப் பேசி வருபவர் ஆனந்த் சீனிவாசன். மிடில் கிளாஸ் மக்களும் எப்படிச் சேமிக்க வேண்டும், எப்படி தேவையில்லாத செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து பேசி வருபவர்
இவர் சொல்வது ரொம்பவே சிம்பிளான ஒன்று தான். அதாவது கூலி வேலை செய்பவராக இருந்தாலும் ஒரு பகுதி சம்பளத்தைச் சேர்க்க வேண்டும் என்பார். இன்று சேமிப்பதால் தான் நாளை நிம்மதியாக இருக்க முடியும் என்பது இவரது பார்முலா..

ஆனந்த் சீனிவாசன்: இப்படி தொடர்ச்சியாகச் சேமிப்பு குறித்து டிப்ஸ் வழங்கி டிரெண்ட் ஆனவர் ஆனந்த் சீனிவாசன். பொருளாதாரத்தில் மட்டுமின்றி, இவர் அரசியலிலும் தீவிரமாக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இவர், பல நேரங்களில் பாஜகவின் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகளை விமர்சித்துள்ளார். குறிப்பாக, இவர் ஊடக வெளிச்சத்திற்கு வந்ததே 2016 பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது தான். தொடக்கம் முதலே பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்த ஒரு சிலரில் ஆனந்த் சீனிவாசனும் ஒருவர்..
சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட போதும், அதை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இது குறித்து தனியார் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "விவசாயி ஒருவர் தனது வீட்டில் சேமிப்பாக 2000 ரூபாய் நோட்டு வைத்துள்ளார். அவருக்குப் பணம் திரும்பப் பெறப்பட்ட தகவல் தெரியவில்லை என்றால் அவரது நிலை என்ன. இதற்கு யார் பொறுப்பு.
திடீர் திடீரென ஏதேதோ சொல்கிறார்கள்.. நாளைய தினமே 500 ரூபாய் செல்லாது என்று சொன்னாலும் சொல்வார்கள். அப்படிச் செய்தால் இது எங்க போய் முடியும்.. 50, 60 ஆண்டுகள் ஆனாலும் நம்மிடம் இருக்கும் ரொக்கத்திற்குப் பிரச்சினை இருக்காது. எப்போது வேண்டுமானாலும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.. சும்மா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணம் செல்லாது எனச் சொன்னால் யாருக்குத் தான் நம்பிக்கை வரும்" என்று கடுமையாகச் சாடியிருந்தார்.
தனிமனித வெறுப்பு: இதற்கிடையே இப்போது அவர் மற்றொரு விஷயத்திலும் பாஜகவை விமர்சித்துள்ளார். பாஜக அரசியல் என்பது தனிமனித அரசியல் வெறுப்பு அரசியலாக மாறிவிட்டதாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "முன்னாடியெல்லாம் ஒரே வீட்டில் அப்பா, மகன், மகள் எல்லாம் பல கட்சி சப்போர்ட்டர்களாக இருப்பார்கள். அரசியல் தனி மனித வாழ்வை பாதித்தது இல்லை. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இன்றைய தனிமனித அரசியல் வெறுப்பு அரசியலாக மாறியது.

ஏன் நான் இதை எழுதுகிறேன் என்றால். சில தினங்களுக்கு முன்பு என் உறவினர் ஒருவர் திடீரென இறந்துவிட்டார். நான் அந்த சடங்குக்கு சென்றிருந்தேன். அங்கு என் உறவினர்கள் பல பேர் வந்திருந்தனர். அவர்களில் 90% பேர் பாஜக கட்சி சப்போர்ட்டர்கள். என்னை கண்டவுடன் அவர்களின் வெறுப்பு பல விதமாக வெளிப்பட்டது. சில பேர் பேசவே இல்லை. சில பேர் நீ இந்த ஜாதியில் இருப்பதால் நீ இப்படியெல்லாம் பேசாதே என அட்வைஸ் செய்தனர். சில பேர் நேரடி கண்டிப்பும் செய்தனர்.
துக்க வீட்டிலும் வெறுப்பு: இறந்த வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல், வெறுப்புதான் மேலோங்கி இருந்தது. இதை எதற்கு எழுதுகிறேன் என்றால், தேவை என்று வரும்போது கட்சி வேறுபாடு தெரிவதில்லை. நாம் காந்திஜீ வழி வாழ்பவர்கள்.. அதனால் தேவை என்று யார் வந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையை கொண்டவர்கள். அரசியல் தனி மனித வாழ்வை பாதிக்காத வகையில் நான் உள்ளேன்.
அரசியலில் ஈடுபடுபவர்கள் மட்டுமே முன்பெல்லாம் அடித்துக்கொள்வார்கள். இப்போது தனி மனிதனை கூட இந்த வெறுப்பு அரசியல் விடவில்லை. இது எங்கே போய் முடியப்போகிறது என்று கவலையாக உள்ளது" என்று அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்












Click it and Unblock the Notifications