அலங்காநல்லூர் மக்கள் கொடுத்த கெடு முடிந்தது.. அடுத்து இவற்றைத்தான் செய்யப்போகிறது தமிழக அரசு!
மாநில அரசு எதையாவது ஒன்றை செய்து போராட்டத்தின் தீவிரத்தை தற்காலிகமாகமாவது தணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சென்னை: மாலை 6 மணிக்குள் ஜல்லிக்கட்டு நடைபெற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்.பிக்கள் 50 பேரும் ராஜினாமா செய்ய வேண்டும் என அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இன்று மதியம், கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இந்த கெடு மூலம் மாநில அரசுக்கு செக் வைக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து அலங்காநல்லூர் வந்துள்ள போராட்டக்காரர்கள் தங்கள் வேலைகள், குடும்பத்தை விட்டுவிட்டு எத்தனை நாள்தான் அங்கேயே தங்கியிருக்க முடியும் என்ற சூழல் வந்துள்ள நிலையில் இந்த கெடு விதிப்பு முக்கியத்துவம் பெற்றது.
கத்தி பார்த்தும், கூச்சலிட்டு பார்த்தும், சீறிப்பார்த்தும் காதில் விழாததை போலவே உட்கார்ந்திருந்த மாநில அரசுக்கு எதிராக அம்மாநில மக்கள் தங்கள் உரிமைக்காக கெடு விதித்தனர்.
எனவே பந்து தமிழக அரசின் கோர்ட்டுக்குள் விழுந்தது. மாநில அரசு எதையாவது ஒன்றை செய்து போராட்டத்தின் தீவிரத்தை தற்காலிகமாகமாவது தணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மாலை 5.30 மணியளவில் முதல்வர் ஓ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கையில், நாளை பிரதமர் மோடியை சந்தித்து, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர கேட்டுக்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும் ஒரு அறிக்கை வெளியிட்டு போராட்டத்தை கைவிட கேட்டுக்கொண்டார்.
இனி நடைபெறப்போவது இதுதான்:
*நாளை காலை 10.30 மணிக்கு டெல்லியில் மோடியை, பன்னீர் செல்வம் சந்தித்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கொண்டுவர கோரிக்கைவிடுப்பார்.
*அதோடுவிடாமல் அவசர சட்டசபை கூட்டத்தை கூட்டி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் கொண்டுவர சொல்லி தீர்மானம் நிறைவேற்றலாம்.
*தமிழக அரசு, சட்டசபையை கூட்டி ஒருமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாகியுள்ளது.