குழந்தைகளுக்கு எது பிடிக்கும்?
சென்னை: குழந்தைகளுக்கு எது பிடிக்கும்.. இதை நாம முடிவு செய்ய முடியுமா.. நிச்சயம் முடியும்... அதேசமயம், அவர்களின் மன ஆசைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் எதையும் நாம் திணிக்கவும் கூடாது.. இதில்தான் பெற்றோர்களுக்கு பெரும் சவால்கள் எழுகின்றன.
சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை என்பது போல் எல்லா குழந்தைகளுக்கும் தனிப்பட்ட ஆசைகள் இருக்கும். எல்லா விஷயங்களிலும் குழந்தைகளுக்கு என்னப் பிடிக்கும் என்றுப் பெற்றோர் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
குழந்தைப் பிறந்து ஆறு மாதம் வரைத் தாய்ப்பால் குடிக்கும். அது வரைக்கும் அந்த சுவையைத் தவிர வேறெதும் தெரியாத குழந்தை ஏழாவது மாதம் முதல் திட உணவுகளை உண்ண ஆரம்பிக்கிறது. அப்போது நீங்கள் கொடுக்கும் உணவைச் சாப்பிட ஆரம்பிக்கும் குழந்தை சுவைக்கேற்றவாறு இதைச் சாப்பிடலாம் இதைச் சாப்பிடக் கூடாது என்று முடிவு செய்கிறது.உணவை ருசியாகக் கொடுத்தால் நிச்சயம் அந்தக் குழந்தை சாப்பிடும்.
நூடுல்ஸ்
இன்றைய நவநாகரிக உலகில் குழந்தைகளுக்கு பீட்சா நூடூல்ஸ் பிஸ்கெட்டுகள் போன்றவற்றை வாங்கிக் கொடுக்கும் நாம் வேர்க்கடலை மிட்டாய் எள்ளு மிட்டாய் தேன் மிட்டாய் போன்றவற்றை ஏனோ வாங்கிக் கொடுப்பதில்லை. சிறு வயதிலேயே நாம் அவர்களைப் பழக்கி விட்டு இன்று என் குழந்தை நூடூல்ஸ் வேண்டும் என்று அடம்பிடிக்கிறது என்று பெற்றோர்கள் புலம்புகின்றனர்.
கம்பு வரகு
கம்மங்கூழும் கேப்பங்கூழும் குடித்த நாமெல்லாம் வளரவில்லையா. உங்கள் குழந்தைக்கு கம்பு வரகு குதிரைவாலி போன்ற தானியங்களில் இனிப்பு மற்றும் கார திண்பண்டங்களைச் செய்துக் கொடுங்கள். முதலில் வேண்டாம் என்று மறுக்கும் குழந்தைகள் பின் அதன் சுவையில் அடிமையாகி விடுவார்கள். கேழ்வரகில் இனிப்பு தோசை லட்டு போன்ற உணவு வகைகளைச் செய்து கொடுங்கள்.
ஐம்பதில் வளையுமா
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். சிறு வயதில் நாம் பழக்கப்படுத்திய உணவுகள் தான் இன்று குழந்தைகள் விரும்பி உண்ணுகின்றனர். அவர்களுக்கு சிறு வயதில் உணவுக் கொடுக்கும் போதே அதன் நன்மைகளையும் கூறுங்கள். தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள் குழந்தைகளைச் சுண்டி இழுக்கின்றன. அந்த சாக்லெட்டுகளால் ஏற்படும் விளைவுகளை குழந்தைகளுக்குப் புரிய வையுங்கள்.
சாப்பிட பழக்குங்கள்
எல்லா காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடப் பழக்குங்கள். வீட்டிலேயே சிறுதானிய சாக்லெட்டுகள் கேக்குகள் போன்றவற்றைச் செய்து உங்கள் குட்டீஸ்களுக்குக் கொடுத்து அசத்துங்கள். பிறகென்ன உங்கள் குழந்தைகள் நீங்கள் எந்த உணவு செய்தாலும் அதைச் சாப்பிட்டு விடும். குழந்தைகளுக்கும் சிறு தானியங்களும் பழங்களும் பிடிக்க ஆரம்பித்து விடும்.
எல்லாம் பிடிக்கும்
சில குழந்தைகள் பீட்சா பர்கர் தான் எனக்குப் பிடிக்கும் என்று கூறுகின்றனர். அந்தக் குழந்தைகளுக்கு தோசை மாவில் வீட்டிலேயே பீட்சா செய்துக் கொடுக்கலாம். வருங்கால தலைமுறையினரை சத்துள்ளவர்களாக மாற்ற பெற்றோர்களால் மட்டுமே முடியும். ஒரு முறை உங்கள் குழந்தை பாரம்பரிய உணவுகளைச் சுவைத்தால் போதும். உங்கள் குழந்தைக்கு இனி எல்லாம் பிடிக்கும்.