ஊட்டியில் கோரமான 5 சடலங்கள்.. விலங்குகளின் உறுமல்.. சோறு-தண்ணீரின்றி இரு நாட்கள் அவதிப்பட்ட இருவர்!
Recommended Video
ஊட்டி: ஊட்டியில் விபத்தில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட இருவரும் கோரமாக சிதிலமடைந்த சடலங்களுடன் உணவு, தண்ணீரின்றி தவித்ததாக கூறப்படுகிறது.
ஊட்டியில் உள்ள மசினக்குடிக்கு சென்னையை சேர்ந்த ராம ராஜேஷ் (36), இப்ராகிம் (35), அருண் (36), வழக்கறிஞர் ரவி வர்மா (39), ஜெயக்குமார் (36), அமர்நாத் (35),தூத்துக்குடியை சேர்ந்த கப்பல் கேப்டன் ஜூட் ஆன்டோ கெவின் (34) ஆகியோர் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
300 அடி பள்ளம்
இவர்கள் கடந்த 30-ஆம் தேதி ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர். பின்னர் 1-ஆம் தேதி காரை எடுத்துக் கொண்டு மசினகுடி காட்டு பகுதிக்கு சென்றனர். அப்போது கல்லட்டி மலைப்பாதையில் புதுமந்து பகுதியில் 35-ஆவது கொண்டை ஊசி வளைவில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் உள்ள 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.
ஊட்டி போலீஸுக்கு தகவல்
இதனிடையே 2-ஆம் தேதியே சென்னைக்கு வந்துவிடுவதாக கூறிவிட்டு சென்றவர்களை காணாது அவர்களது உறவினர்கள் பதறினர். செல்போனும் வேலை செய்யாத நிலையில் சந்தேகமடைந்து ஊட்டி காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.
சென்னையிலிருந்து வந்தவர்கள்
இதையடுத்து போலீஸாரும் வனத்துறையினரும் தேடினர். அப்போது கல்லட்டி பகுதியில் 300 அடி ஆழத்தில் கார் ஒன்று கிடந்தது. அருகே சென்று பார்த்த போது இருவருக்கு உயிர் இருப்பது தெரியவந்தது. மேலும் உறவினர்கள் பதறிய படி விபத்தில் சிக்கியவர்கள் சென்னையிலிருந்து வந்தவர்கள்தான் என தெரிந்தது.
தண்ணீர் இல்லை
காயமடைந்த ராம் ராஜேஷ் மற்றும் அருண் ஆகியோர் மீட்கப்பட்டனர். இவர்கள் இருவரும் கடந்த 2 நாட்களாக கோரமாக காட்சியளித்த 5 சடலங்களுடன் குத்துயிரும் கொலை உயிருமாக இருந்துள்ளனர். விலங்குகள் எழுப்பும் உறுமல் சப்தங்களும் இவர்களை அச்சுறுத்தியுள்ள நிலையில் இவர்கள் உண்ண உணவும், தண்ணீரும் இன்றி உயிருடன் இருந்தது நிச்சயம் தெய்வாதீனம் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.