போராட்டத்தை போலவே உயிரும் முக்கியம்... உரிமைக்காக போராடுபவர்கள் கவனத்திற்கு!
உரிமைகளுக்காக போராடுவது எவ்வளவு முக்கியமோ அதே போன்று உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் முக்கியம் என்பதை உணர்ந்து போராடுங்கள் உணர்வாளர்களே.
Recommended Video
சென்னை : தமிழர்களின் உரிமைகளுக்காக போராடுவது எவ்வளவு முக்கியமோ அதே போல உயிரைக் குடிக்கக் கூடிய போராட்டங்களில் ஈடுபடாமல் எதிர்ப்புக் குரலாகவும், உரிமைக் குரலாகவும் மட்டுமே பதிவு செய்வதும் அவசியம். உணர்ச்சிவசப்பட்டு போராட்டத்தில் உயிரை துச்சமென மதித்து இறக்கத் தயாராகும் போராட்டக்காரர்களே உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை உணருங்கள்.
தமிழர்கள் உணர்வுமிக்கவர்களாக இருப்பதாலேயே உலகம் முழுவதும் புகழ்பெற்றவர்களாக இருக்கின்றனர். சொந்த வீடாக இருந்தாலும் தாய் நாடாக இருந்தாலும் ஏதேனும் பிரச்னை என்றால் துணிந்து வந்து போராட்டக்களத்தில் நெஞ்சை நிமிர்த்து நிற்கும் தில்லானவர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிப் பெருக்கில் இவர்கள் செய்யும் போராட்டம் அவர்களின் உயிரையே குடித்து விடுகிறது.
மதுரையில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் பேரணி துவங்கிய போது ஏராளமான தொண்டர்கள் வைகோவிற்கு ஆதரவாக ஒன்றுதிரண்டனர். அப்போது மேடைக்கு அருகிலேயே ரவி என்ற மதிமுக பிரமுகர் நியூட்ரினோ அமைக்கும் மத்திய அரசை கண்டித்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
உரிமைக்காக உயிர்விடும் போராட்டக்காரர்கள்
உயிருக்கு போராடும் நிலையிலும் அவர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடியே இருந்தார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இன்று காவிரி வாரியம் கோரி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் முழு அடைப்பானது நடக்கிறது. இந்த முழுஅடைப்பின் போது திண்டிவனத்தில் நடந்த ரயில் மறியலில் பாமகவினர் 2 பேர் ரயில் மீது ஏறி போராட முயற்சித்துள்ளனர்.
கருகிய மலர்கள்
அப்போது மின்சார ரயில் செல்லும் மின்சார வயரில் உறசியதில் பாமக தொண்டர் ஒருவர் தீப்பிடித்து தூக்கி வீசப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த இந்த போராட்டங்கள் மட்டுமல்ல இலங்கைத் தமிழர்கள் படுகொலைக்காக 2010ல் தீக்குளித்து உயிர்விட்ட முத்துக்குமார், ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுதலை செய்யக்கோரி நடந்த மனிதசங்கிலிப் போராட்டத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த செங்கொடி 2011ல் தீக்குளித்து உயிர் நீத்தார்.
காவிரிக்காக உயிர் விட்ட விக்னேஷ்
நதிநீர் பிரச்னைக்கு எதிராக 2016ம் ஆண்டில் சென்னையில் நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் அந்தக் கட்சியின், ‘இளம்புலிகள்' எனப்படும் மாணவர் அமைப்பைச் சேர்ந்த விக்னேஷ் பாண்டியன் தீக்குளித்தார். மாணவர்களே கோபம் கொள்ளுங்கள் உரிமைக்காக போராடுங்கள் என்று உணர்ச்சிப் பெருக்கோடு கடிதம் எழுதிவைத்துவிட்டு காவிரி நீருக்காக உயிரை விட்டார் விக்னேஷ்.
கவனத்தோடு போராடுங்கள்
உரிமைக்கான போராட்டங்கள் எவ்வளவு முக்கியமோ அதே போன்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் உயிர் அவருடைய குடும்பத்தினருக்கு மிக முக்கியம். எனவே போராட்டத்தின்போது உணர்ச்சிவசப்படாதீர்கள். உணர்வுகளை அமைதியான முறையில் அடக்கமான முறையில் தெரிவிக்க வேண்டும். உங்களுக்கும் குடும்பம் உண்டு. அவர்களுக்கு நீங்கள்தான் உலகம். அந்த உலகத்தையும் மனதில் கொண்டு போராட வேண்டும். தீக்குளிப்பது எப்படி தவறான செயலோ அதேபோல இதுபோன்ற போராட்டங்களின்போது உயிரைக் குடிக்கக் கூடிய விஷயங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து கவனம் காக்க வேண்டும்.