அத்தைமடி மெத்தையடி கவிதை எழுதிய தீபாவுக்கே இந்த நிலையா?
ஜெயலலிதாவிற்காக 'அத்தைமடி மெத்தையடி' என கவிதைப் புத்தகம் எழுதி வெளியிட்டவர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபா. இப்போது ஆசையான அத்தையை பார்க்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயகுமாரின் மகள் தீபா. இவர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், ஜெயலலிதாவை பார்க்க அவரை அனுமதிக்கவில்லை. அத்தையை சந்திக்க 3 நாட்களாக தொடர்ந்து முயற்சி செய்தும் பலனில்லை.
எனது தந்தை ஜெயகுமார் 1995ம் வருடம் மரணம் அடைந்தபோது, எங்கள் இல்லத்துக்கு வந்து ஜெயலலிதா ஆறுதல் கூறினார். ஆனால் சமீப காலமாக என்னை அத்தையுடன் தொடர்பு கொள்ள சிலர் அனுமதிக்க வில்லை. போயஸ் தோட்டத்தின் உண்மையான வாரிசாக நான் வந்துவிடுவேன் என்ற அச்சத்தில் என்னை தடுக்கின்றனர் என்று கூறியிருந்தார்.
இப்போதும் மருத்துவமனையில் அத்தையை சந்தித்து நலம் விசாரிக்க வந்தேன். ஆனால் சிலர் தடுத்து விட்டனர் என்றார் ஆதங்கத்துடன். ஜெயலலிதாவின் உண்மையான ரத்த சொந்தமான தீபாவை ஏன் தடுக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள அதற்கான பின்னணி தகவலை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள்
ஜெயக்குமாரும் விஜயலட்சுமியும் திருமணம் முடிந்த கையோடு போயஸ் கார்டனில் ஜெயலலிதாவோடுதான் வாழ்ந்து வந்தார்கள். அங்கேதான் தீபா பிறந்தார். அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பில் ஜெயக்குமார் குடும்பம் கார்டனில் இருந்து வெளியேறியது. இடையில் ஜெயலலிதாவை தீபா எவ்வளவோ முறை சந்திக்க முயன்றும் முடியவில்லை. ஜெயக்குமார் குடும்பம் மீண்டும் கார்டனுக்குள் வருவதை அங்கிருக்கும் சிலர் விரும்பவில்லை என்று சொல்கிறார்கள்
அண்ணன், அண்ணி மரணம்
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் இவர் 1995ம் ஆண்டு மரணமடைந்தார். அவரது மனைவி விஜயலட்சுமி கடந்த 2012ம் ஆண்டு முதலே உடல்நலம் குன்றியிருந்தார். அவரது மகள் தீபாவின் திருமணம், சமீபத்தில்தான் நடந்தது. அந்த திருமணத்துக்கு ஜெயலலிதா செல்லவில்லை. மணமக்கள் இருவரும் போயஸ் தோட்டத்திற்குப் போய் வாழ்த்து பெற்றனர். விஜயலட்சுமியின் உடல்நிலை மோசமானது 2013ம் ஆண்டு அவர் மரணமடைந்தார்.
சந்திக்க முடியாத தீபா
விஜயலட்சுமி வீட்டிற்கு முதல்வர் வருவார், அஞ்சலி செலுத்துவார் என்று அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஆனாலும் அவர் போகவில்லை. இந்த நிலையில்தான் 2014ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குப் போனார் ஜெயலலிதா. ஜாமீனில் வீடு திரும்பிய ஜெயலலிதா யாரையும் பார்க்கவில்லை. அப்போது போயஸ் தோட்டத்திற்குப் போனார் தீபா. ஆனால் அவரால் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை. சிலர் சந்திக்க விடவில்லையாம்.
ஜெயலலிதா வாரிசு
தீபா லண்டனில் இதழியல் படித்து பட்டம் பெற்றவர். கடந்த ஆகஸ்ட் போயஸ் கார்டனுக்கு வந்து ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். கார்டன் வாசலில் சந்திப்பிற்கான காரணம் கேட்டுள்ளனர். தீபா அவரிடம், இந்த போயஸ் கார்டன் சொத்துக்கு நான்தான் உண்மையான வாரிசு. எங்க பாட்டி சந்தியா தெளிவா உயில் எழுதி வச்சிருந்தாங்க. அவங்களோட மகன், மகள் வயிற்றுப் பேரன், பேத்திகளுக்குத்தான் இந்தச் சொத்து சொந்தம். அப்படிப் பார்த்தா நான்தான் இந்த வீட்டு எஜமானி. நான் இங்க இருக்கிற என்னோட அத்தையைப் பார்க்கனும். அவங்களப் பார்க்க விடாம தடுக்க நீங்கள்லாம் யாரு என்று கேட்டாராம்.
அரசியல் வாரிசு
இந்த தகவலை ஜெயலலிதாவிடம் போயஸ்தோட்டத்தில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஜெயலலிதாவை சந்திக்க தீபாவிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கார்டன் வாசலிலேயே ஒருமணி நேரம் அழுது கழித்து விட்டு தீபா திரும்பச்சென்றதாக கூறப்படுகிறது. தீபாவுக்கு, ஜெயலலிதாவின் அரசியலில் வாரிசாக ஆக வேண்டும் என்று ஆசை இருப்பதாக கூறப்படுகிறது. அரசியலில் ஈடுபடுவது குறித்து பலமுறை அவர் ஜெயலலிதாக்கு கடிதம் எழுதியதாகவும் அதற்கு எந்தப் பதிலும் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
பதில் சொல்லாத ஜெயலலிதா
அத்தையைப் போல அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை தீபாவுக்கு இருக்கிறது. ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி அறிந்திருப்பதால், அவரது சுமையை குறைக்கும் வகையில், அரசியலில் ஈடுபட அவர் பலமுறை ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதினார். அதற்கு எந்தப் பதிலும் ஜெயலலிதா கூறவில்லை. லண்டனில் போய் இதழியல் படித்து பட்டம் பெற்ற தீபாவால், சும்மா இருக்கவும் முடியவில்லை.
வாரிசு சண்டை
திருமணம் முடிந்து போயஸ் தோட்டத்திற்கு தீபா தம்பதியர் வந்தபோது வாழ்த்தினார். அவர்களுக்கு ஒரு ப்ளாட்டையும் பரிசளித்தார். திருமண வாழ்க்கை சுமுகமாக அமையவில்லை தீபாவுக்கு. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதில் ஜெயலலிதா தலையிடவில்லையாம். அதன்பிறகுதான் வாரிசு சண்டையை கிளப்பியுள்ளார் தீபா.
தீபாவின் திட்டம்
தீபா உட்பட யாரையும் தனது வாரிசாக அறிவிக்க ஜெயலலிதா தயாராக இல்லையாம். தீபா அரசியலுக்கு வந்தால் அவரைச் சுற்றி ஒரு அதிகார வட்டம் உருவாகும். அதை ஜெயலலிதா ஏற்கவில்லையாம். இதற்கிடையே தீபாவின் குடும்பத்துக்கு நெருக்கமான பா.ஜ.க. தலைவர் ஒருவர் தீபாவை சந்தித்து, அமெரிக்காவில் ஒரு செய்தி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வந்திருக்கிறது. அதற்குப் போய்விடுவதுதான் நல்லது. ஐந்து வருட ஆட்சி ஜெயலலிதா கையில் உள்ளது. அதன்பிறகுதான் அவரது அரசியல் வாரிசு யார் என்கிற விவாதம் வரும். அந்தநேரம் பார்த்துக் கொள்ளலாம் என கூறியுள்ளாராம்.
அத்தையை சந்திக்க முடியலையே
அதே நேரத்தில் தீபாவே, தன்னை அரசியல் வாரிசாக ஜெயலலிதா அடையாளப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார். அத்தை என்ன தான் சொல்கிறார் அதை நேரடியாக என்னிடம் சொல்லவேண்டும் என தீபா தனது பிடிவாதத்தை விடாமல் போராடி வருகிறார், போயஸ் கார்டனுக்கு சென்றும் சந்திக்க முடியாத தீபாவினால் தற்போது அப்பல்லோவிற்குள்ளும் நுழைய முடியாமல் போய்விட்டது.