கொடநாடு கொள்ளை: ஜெயலலிதா படம்போட்ட வாட்சுகள் உண்மையில் யாருடையது?
கொடநாடு பங்களாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஜெயலலிதாவின் வாட்சுகள் இவைதான் என்று போலீசார் வெளியிட்டுள்ள புகைப்படம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
சென்னை: கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவில் நுழைந்து கொள்ளையர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாட்சுகளையும் பளிங்கு பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். அவற்றை தற்போது மீட்டுவிட்டோம் என்று கூறி போலீசார் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்தப் படத்தைப் பார்த்த அதிமுக தொண்டர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றனர்.
ஜெயலலிதா தங்கி ஓய்வெடுத்த கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ந் தேதி, காவலாளியை கொலை செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது மர்ம கும்பல். எஸ்டேட்டில் ஓட்டுநராக பணியாற்றிய கனகராஜ், கோவையைச் சேர்ந்த தனது நண்பர் சயானுடன் சேர்ந்து கொள்ளைக்கு சதித்திட்டம் தீட்டி செயல்படுத்தியது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கபட்டது.
இதனையடுத்து அந்தக் கொள்ளைக் கும்பலை போலீஸார் தீவிரமாக தேடிய நிலையில், நேற்று முன்தினம் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு நபரான சயான்,தனது குடும்பத்தினருடன் கேரளாவில் சாலை விபத்தில் சிக்கி, கவலைக்கிடமான நிலையில் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் காரில் பயணம் செய்த மனைவி மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

11 பேர் கும்பல்
கொடநாடு காவலாளி கொலை சம்பவம் தொடர்பாக கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.கொள்ளை முயற்சியில் 11 பேர் ஈடுபட்டதாக, பிடிபட்டவர்கள் போலீசிடம் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி எஸ்பி முரளி ரம்பா
இதுகுறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறும்போது,"எஸ்டேட்டில் புகுந்த கொள்ளையர்கள், அங்கு பணம் இல்லாததால் ஜெயலலிதா, சசிகலாவின் அறைக்குள் புகுந்து 5 கடிகாரங்கள் மற்றும் அலங்கார பொருட்களைத் திருடிக்கொண்டு தப்பியுள்ளனர். பிடிபட்டவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் அலங்கார பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அரசியல் சர்ச்சைகள் ஏதும் இல்லை"என்று கூறி இருந்தார்.

ஜெ.படம்போட்ட வாட்சுகள்
ஆனால் போலீஸ் வெளியிட்ட படங்கள் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஜெயலலிதா தனது கைகளில் எப்போதும் வார் டைப்பிலான வட்ட வடிவ, சதுர வடிவ டயல் வாட்சுகளையே கட்டுவார். அதில் ஜெயலலிதாவின் புகைப்படம் பொறிக்கப்பட்டிருக்காது. அதே போல கோல்டு செயின் வாட்சுகளை ஜெயலலிதா எப்போதுமே கட்டியது இல்லை என்று மறுக்கும் அதிமுகவினர், அதற்கு சாட்சியாக இப்போதும் பார்க்க கிடைக்கும் ஜெயலலிதாவின் புகைப்படங்களை உதாரணம் காட்டுகிறார்கள்.

யாரைக் காப்பாற்றுகிறது போலீஸ்
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டது முதல் மரணம் நடந்தது வரை பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர் ஓபிஎஸ் அணியினர். அதே போல அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜெ.மரணம் குறித்த மர்மங்களை வெளியே கொண்டுவரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். ஆனால் தமிழக அரசோ,சசிகலா உள்ளிட்டவர்களோ மர்மங்களை விலக்க முன்வரவில்லை. இந்த நிலையில் பொய்யான படங்களைக் காட்டி போலீசார் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களையும் மூடி மறைக்க முயல்கின்றனர். யாரையோ காப்பாற்ற தமிழக போலீசார் துடிக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
கொடநாடு கொள்ளை,கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் கூறும் தகவல்கள் நம்பும்படியாக இல்லை என்று தனது அறிக்கையொன்றில்,தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தேகம் எழுப்பியிருந்தார். அதே போல,காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் திருநாவுக்கரசரும் போலீசார் கூறிய கொடநாடு குறித்த தகவல்களில் சந்தேகம் தெரிவித்திருந்தார். பாமக நிறுவனர் ராமதாசும் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று கோரியிருந்தார். கொடநாடு கொள்ளையில் பல்வேறு திருப்பங்கள் நடந்துவரும் நிலையில் போலீசாரே திட்டமிட்டு இதுதான் ஜெயலலிதா வாட்ச் என்று ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்கிறார்கள் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications