1976 மாதிரி இப்போ சாதனை மழையெல்லாம் இல்லைங்க.. சாதாரண பருவ மழைக்கே சென்னை தத்தளிப்பது ஏன்?
Recommended Video
சென்னை: சென்னை ஏன் அடிக்கடி இப்போதெல்லாம் வெள்ள பாதிப்பில் சிக்குகிறது என்பதற்கான காரணங்களை புள்ளி விவரங்கள் சுலபமாக விளக்குகின்றன.
வடகிழக்கு பருவமழை பலமாக பெய்யக் கூடிய நில அமைப்பில் இருக்கும் பகுதிதான் சென்னை. எனவே இந்த நகருக்கு புயலோ, மழையோ புதிது கிடையாது.
ஆனால் 2015 மழைக்காலத்தில், 100க்கும் மேற்பட்ட அப்பாவிகள் மழை, வெள்ளம் சார்ந்த விபத்துகளில் பலியாகினர். 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சம் சென்னைவாசிகளிடம் இந்த ஆண்டு உள்ளதே ஏன்?
சாதனை மழையே இல்லை
இத்தனைக்கும் சென்னையில் சமீபத்தில் ஒருநாள் கூட சாதனை அளவு மழை பெய்யவில்லை. 1976ம் ஆண்டு சென்னையில் ஒரே நாளில் 452 மி.மீ மழை பெய்ததுதான் இதுவரையிலும் சாதனையாக தொடருகிறது. அப்போதும் அடையார் ஆறு நிரம்பி முதல் மாடி வீடுகளுக்குள்ளும் தண்ணீர் சென்றது வரலாறு. ஆனால், இவ்வாண்டு அக்டோபர் 27ம் தேதி முதல் 8 நாட்களில் மொத்தமே 441.3 மி.மீ மழைதான் பெய்துள்ளது. ஆனால், நாம் இதற்கே அஞ்சுகிறோம்.
குளங்கள், ஏரிகள்
கடும் புயல், மழைக்காலங்களிலும் தண்ணீர் கடலில் ஓடி கலக்க ஏற்ற வகையில் இருந்த நில அமைப்பு இப்போது மாற்றப்பட்டுள்ளது. கால்வாய்கள், குளங்கள், ஏரிகள் வீடுகளாக மாறிவிட்டன. கேர் ஏர் என்ற சென்னையை சேர்ந்த ஆய்வு அமைப்பு ஒன்றின் ஆய்யவுப்படி, 1980 முதல் 2012ம் ஆண்டு காலகட்டத்திற்குள் சென்னை 9 மடங்கு பெரிதாகிவிட்டதாம்.
எப்படி கூடியுள்ளது பாருங்கள்
சென்னையின் குடியிருப்பு பகுதி என்பது இக்காலகட்டத்தில் 47 சதுர கிலோமீட்டர் என்ற அளவில் இருந்து 402 சதுர கிலோமீட்டர் அளவுக்கு விரிவடைந்துள்ளது. இதனால் நீர் நிலைகள் பரப்பு 186 சதுர அடியிலிருந்து 71 சதுர அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பை அகற்ற முடியாதாம்
2015ம் ஆண்டு வெள்ளத்திற்கான காரணத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு, தாக்கல் செய்த ஆய்வறிக்கையிலும், இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகள்தான், வெள்ளத்திற்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட விரோத மாஃபியாக்களை மாநில அரசு ஒடுக்க வேண்டும் என்றுதான் நிலைக்குழு விரும்புகிறது. ஆனால் அதையெல்லாம் செய்ய முடியாது, ரொம்ப கஷடம் என்று மாநில அரசு, ஹைகோர்ட்டில் தெரிிவித்துள்ளது.