டிடிவி தினகரன் திடீர் டெல்லி விசிட்- பரபர பின்னணி தகவல்கள்
திஹார் சிறையில் இருந்து சென்னை வந்த தினகரன் மீண்டும் அடித்து பிடித்துக்கொண்டு டெல்லி சென்றிருக்கிறார். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சென்னை: திஹார் சிறையில் இருந்து கடந்த வாரம் சென்னை திரும்பிய தினகரன் ஆக்டிவ் அரசியலில் இறங்கினார். ஆனால் டெல்லியில் இருந்து வந்த ஒரே ஒரு போன்தான் அவரை மீண்டும் டெல்லிகே போக வைத்திருக்கிறது என்கின்றனர்.
அதிமுகவில் இப்போது 3 அணி உள்ளது. டிடிவி தினகரன் திஹார் செல்லும் முன் அமைச்சர்கள் கொடுத்த மரியாதை வேறு மாதிரியாக உள்ளது. இப்போது டிரெண்ட் மாறிவிட்டது. கட்சி, ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி கையில் எடுத்துக்கொண்டது. ஆனால் திஹார் சிறையில் இருந்து வந்த டிடிவி தினகரன் மீண்டும் ஆக்சனில் இறங்கவே பரபரப்பு பற்றிக்கொண்டது.
தினசரியும் எம்எல்ஏக்கள் பார்த்து பேட்டி தட்ட, எடப்பாடி பழனிச்சாமி ஒரு பக்கம் எம்எல்ஏக்களை சந்திக்க, ஜெயக்குமார் ஒரு பக்கம் பேட்டி கொடுக்க என அதிமுகவில் ஈபிஎஸ், டிடிவி தினகரன் அணிதான் இப்போது செய்திக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.
பெங்களூருவில் எச்சரிக்கை
பெங்களூரு சிறைக்கு ஜூன் 5ஆம் தேதி சசிகலாவை சந்திக்க சென்ற போது தனது ஆதரவு எம்எல்ஏக்களை அழைத்து சென்றார். அப்போதே அங்கிருந்த திவாகரன் உள்ளிட்டவர்கள் கடுமையாக எச்சரித்துதான் அனுப்பினார்களாம்.
அமைதியாக இருக்கணும்
60 நாட்கள் அமைதியாக இருங்க இல்லாட்டி அமைதியாக்கிருவோம் என்று எச்சரித்து அனுப்பினார்களாம், அதையேதான் 60 நாட்கள் ஒதுங்கியிருப்பதாக பேட்டி கொடுத்தார் தினகரன். ஆனால் அப்படி நடந்து கொண்டதாக தெரியவில்லை.
ஒதுக்கினது ஒதுக்கியதுதான்
அமைச்சர்கள் தரப்போ அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க மாட்டோம் என்று உறுதியாக சொன்னார்கள். திவாகரன் தரப்பும் ஒரு பக்கம் கட்சிக்குள் கால் ஊன்ற நினைக்க, டிடிவி தினகரன் தனது ஆதரவை நிரூபிக்கவே எம்எல்ஏக்களை சந்திக்க ஏற்பாடு செய்தார்.
கூடிய ஆதரவாளர்கள்
10 பேராக இருந்த ஆதரவாளர்கள் எண்ணிக்கை 32 ஆக உயரவே, டெல்லியில் இருந்து அவசர போன் வந்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் வரும் நேரத்தில் என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு. மறுபடியும் ஜெயில்வாசம் போகனுமா? இன்னும் இருக்கிற வழக்கை எல்லாம் தூசி தட்டணுமா என்று கேட்கவே கப்சிப் ஆகி விட்டாராம் தினகரன்.
இதனையடுத்தே எம்எல்ஏக்கள் யாரும் இப்போது தினகரன் வீட்டுப்பக்கம் செல்லவில்லை.
ஜெயக்குமாரும் அமைதி
அமைச்சர்களில் முன்பு தங்கமணி, வேலுமணி, வீரமணிதான் பேட்டி கொடுப்பார்கள். சமீபகாலமாக ஜெயக்குமார்தான் அதிகம் பேசுகிறார். இதனால் அவரை ஆஃப் செய்து விட்டார்களாம். இப்போதைக்கு அனைவரையும் இணைக்கும் முயற்சியே நடக்கிறதாம்.
டெல்லி விசிட்
இந்த சூழ்நிலையில்தான் டிடிவி தினகரன் திடீர் என டெல்லிக்கு சென்றுள்ளார். கட்சி, ஆட்சி விவகாரங்களில் தலையிடக்கூடாது. அப்படி தலையிட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க தயாரா இருங்க. முதல்ல டெல்லிக்கு வாங்க என்று முக்கிய நபரிடம் இருந்து அழைப்பு வந்ததன் பேரிலேயே தினகரன் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.