நீங்கள் ஏன் திமுகவில் சேரக்கூடாது? தந்தியடித்து கமலை அழைத்த கருணாநிதி!
நீங்கள் ஏன் திமுகவில் சேரக் கூடாது என்று 1983ல் திமுக தலைவர் கருணாநிதி தந்தி அடித்து தன்னிடம் கேட்டார் என நடிகர் கமல் ஹாசன் சுவாரஸ்மான தகவலைத் தெரிவித்தார்.
சென்னை: திமுகவின் அதிகாரப் பூர்வ நாளேடான முரசொலியின் 75வது ஆண்டு பவள விழா நிகழ்வில் நடிகர் கமல் பங்கேற்றுப் பேசினார். அப்போது, நீங்கள் ஏன் திமுகவில் சேரக் கூடாது எனத் தந்தி அடித்து திமுக தலைவர் கருணாநிதி தன்னிடம் கேட்டதாக நடிகர் கமல் சுவாரஸ்மான தகவலை தெரிவித்தார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி வெளியாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. முரசொலியின் பவள விழாவின் வாழ்த்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் இந்து ராம், நக்கீரன் ஆசிரியர் கோபால், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தினமலர் ஆசிரியர் ரமேஷ், டெக்கன் கிரானிக்கல் ஆசிரியர் பகவான் சிங், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம், ஆனந்த விகடன் மேலாண் இயக்குநர் பா. சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்.
திமுகவில் சேர நினைத்திருந்தால்..
இறுதியாக கமல் பேசிய போது, தான் திமுகவில் இணைய வேண்டும் என்று நினைத்திருந்தால் 1983ம் ஆண்டே இணைந்திருக்கலாம் என்று சுவாரஸ்யமான தகவல் ஒன்றை திமுக தலைவர் கருணாநிதி பற்றிக் கூறினார்.
திமுக தலைவர் அடித்த தந்தி
1983ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியிடம் இருந்து தனக்கு ஒரு தந்தி வந்ததாகவும், அதில், "நீங்கள் ஏன் திமுகவில் சேரக்கூடாது" எனக் கேட்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்ட கமல், தனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் தந்தியை மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டாராம்.
இன்று வரை பதில் இல்லை
கருணாநிதி அனுப்பிய தந்திக்கு இன்று வரை தான் பதில் அளிக்கவில்லை என்று கூறிய கமல், இதுவரை, தான் அனுப்பிய தந்திக்கு என்ன பதில் என்று கருணாநிதியும் கேட்கவில்லை என்று கமல் சுவாரஸ்யத் தகவலை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
பெருந்தன்மை
இதனை, கருணாநிதியின் பெருந்தன்மை என்று புகழ்ந்த கமல், அதே மரியாதை முரசொலி பவளவிழா மேடையிலும் தனக்குக் கிடைக்கும் என்பதால்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகக் கூறினார்.