ஒப்புக்குப் போராட்டம் நடத்தி ஒய்யாரமாக போலீஸ் வேனில் ஏறிய எம்.எல்.ஏ. கீதா ஜீவன் எங்கே?
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை நானும் எதிர்க்கிறேன் என கூறிக் கொண்டு ஒப்புக்கு போராட்டம் நடத்திய கீதா ஜீவன் எம்.எல்.ஏ. இத்தனை மக்கள் பலி கொள்ளப்பட்ட நிலையில் வாய்மூடி மவுனியாக இருப்பது அம்மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நேற்று 100-ஆவது நாளையொட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்த அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கீதாஜீவனும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பாக பாதுகாப்பாக கைது என்ற பெயரில் வெளியேறிவிட்டதாக தெரிகிறது.
12 பேர் பலி
ஒருத்தனையாவது சுட்டுத் தள்ளனும் என்று கூறியவாறே போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு 12 பேரை கொன்றுவிட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துவிட்டனர். இன்றும் தூத்துக்குடியில் போராட்டம் ஓயவில்லை.
ஓடி போனது ஏன்
ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த மக்களை காக்காமல் ஒப்புக்காக மட்டுமே போராடிய கீதாஜீவன், இன்று ஏன் போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. மேலும் அவர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட உடல்களையும், காயமடைந்தோரையும் பார்க்க வரவில்லை. இவ்வாறு ஓடி ஒளிவதற்கு பேர்தான் ஸ்டாலின் அடிக்கடி கூறுவதை போல் திமுக மக்களுக்காக போராடும் இயக்கமா.
நியாயம் கேட்கவில்லை
கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுடன் அவர் உடன் இருக்க வேண்டுமா இல்லையா. தூத்துக்குடியே போராட்டக்களமாக மாறி வருகிறது. மருத்துவமனையில் குண்டடிப்பட்டவர்கள் சிலர் மோசமான நிலையில் உள்ளனர், இந்த நேரத்தில் மக்களுடன் மக்களாக இருக்காமல் எங்கே போனார் கீதா ஜீவன்.
இன்றும் துப்பாக்கிச் சூடு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுடனும் மக்களுக்காக போராட்டக் களத்தில் இறங்கியிருக்கலாமே. அதை செய்யாமல் என்றோ ஒரு நாள் திமுக அறிவிக்கும் போராட்டத்திலும் அனைத்து கட்சி கூட்டத்திலும் கலந்து கொள்வதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது. தூத்துக்குடி மருத்துவமனையில் இன்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது.
ஆக்கப்பூர்வமாக செய்யாமல்
இந்த நேரத்தில் தன் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு போலீஸாரின் துப்பாக்கிக்கு முன்னால் வந்து நின்றிருக்கலாமே. போராட்டத்தை கட்டுப்படுத்தவும் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் ஆக்கப்பூர்வமான செயல்களில் இறங்காமல் நானும் போராடுகிற பேர்வழி என்று கண்துடைப்பு போராட்டம் நடத்திவிட்டு முடங்கிக் கொள்வதில் என்ன இருக்கு. இவையெல்லாம் சாமானிய மக்கள் கேட்கும் கேள்விகளாகும். நியாயம்தானே, ஓட்டு போட்டவர்களை பாதுகாக்க வேண்டியது அத்தொகுதி உறுப்பினர்களின் கடமைதானே.