இலங்கை அரசுக்கு ஆதரவுப் பிரச்சாரம்... பத்திரிகையாளர்களைக் 'குளிப்பாட்டும்' மெகா தயாரிப்பு நிறுவனம்?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை தொடர்பான அந்த பெரிய தயாரிப்பு நிறுவன பெயரை உச்சரித்தாலே பெரிய தீட்டு மாதிரி ஒதுங்கி ஓடினார்கள் அத்தனை பத்திரிகையாளர்களும் (லேப்டாப் வாங்கிய ஓரிருவர் தவிர). இப்போதும் பலர் அப்படித்தான். ஆனால் 'பெரிய பெரிய தலைகளே சமரசமாகிவிட்டார்கள்.. நமக்கு மட்டும் என்ன' என்ற மனநிலை சிலருக்கு வந்துவிட்டது போலிருக்கிறது.
இன்றைக்கு அதே நிறுவனத்தின் செலவில் இலங்கை சென்று நுவரேலியா என்ற குளு குளு பிரதேசத்தில் மது மாது என்று ஏகத்துக்கும் சொகுசு வாழ்க்கை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இவர்களில் பெரும்பான்மையோர் நிறுவனத்தின் முதல் பட வெளியீட்டின் போது, 'இனப் படுகொலையானனுடனான' தொடர்புகளுக்கான ஆதாரங்களை எடுத்துப் போட்டு கத்தி கூப்பாடு போட்டவர்கள்தான்.
இப்போது எதற்கு இந்த இலங்கைப் பயணம் என்கிறீர்களா?
நிறுவனத்தின் அருமை பெருமையை இங்கே முடிந்தவரை ஊதிப் பெரிதாக்கவும், அவர்களின் மெகா படத்துக்கு கூடுதல் புரமோஷன் வேலைப் பார்க்கவும்தான் என்கிறார்கள். முன்னணி பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ப்ரஸ் க்ளப் மற்றும் தலைமைச் செயலக ப்ரஸ் ரூம்களை வலம் வரும் சிலரையும் சேர்த்து 15 பேர் வரை அந்த நிறுவனம் அழைத்துச் சென்றுள்ளது ('இவங்கள்லாம் முன்னணி பத்திரிகையாளர்கள்னா, அப்ப நாமல்லாம் யாருப்பா?' என கடுப்பாகிறார்களாம் உண்மையிலேயே முன்னணி பத்திரிகையாளர்களாக, கடைசி வரை இனப்படுகொலையானன் எதிர்ப்பு நிலையில் உள்ள பலர்).
இந்த பதினைந்து பேருக்கும் பட்ஜெட் தலா 2000 டாலர்கள் (தலைக்கு ரூ 1.4 லட்சம்.. மொத்தம் ரூ 20 லட்சம். அந்த கம்பெனிக்கு இதெல்லாம் ஜூஜுபியாச்சே!).
சரி.. இவர்கள் இலங்கை போயிருப்பது நிறுவன பெருமை பேச மற்றும் பட புரமோஷனுக்கு மட்டுமா?
'இல்லை இல்லை... அதை விட மறைமுகமான ஆபத்தான ஒரு காரியத்துக்காக' என்கிறார்கள் ஈழத் தமிழ் உணர்வாளர்கள்.
இலங்கை தமிழர்களின் இன்றைய 'நல்ல' நிலை, அரசு அவர்களுக்காக செய்து வரும் மேம்பாட்டுப் பணிகளை எழுதுகிறோம் என்ற பெயரில் முழுக்க முழுக்க இலங்கை அரசுக்கு சாதகமான தகவல்களை உலகெல்லாம் பரப்பவே சென்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். (இனி கொஞ்ச காலத்துக்கு விதவிதமான அனுபவ தொடர்கள் களைகட்டும்..!)
-இவை அத்தனையும் வாட்ஸ்ஆப் உள்ள சமூக தளங்களில் கடந்த இரு தினங்களாக வெளியாகி வரும் தகவல்கள்.
தமிழன் என்று ஒரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு-ன்னு சொன்னது இதையெல்லாம் கணித்துதானோ!!