அரசியலுக்கு வருகிறாரா கமல்? அத்தனை வாய்ப்புகளும் அருமையாக உள்ளதை பாருங்கள்!
செய்தியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கமல் அளித்த அந்த ஒற்றை பதிலுக்காக அரசாங்கமே பதறிதுடிக்கிறது. எத்தனையோ எதிர்க்கட்சி தலைவர்கள் கூறும்போதுகூட கிணற்றில் போட்ட கல்மாதிரி இருந்த ஆளும் தரப்பு இப்போது, க
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியலில் கால் பதிக்க ஏற்ற சூழல் உருவாகியுள்ளதாக கருதுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
நடிகர் கமல்ஹாசன் திராவிட கொள்கை கொண்ட தேசப்பற்றாளர். வருமான வரியை மறைக்காமல் கட்டி வருபவர் என்பதற்காக பாராட்டு சான்று பெற்றவர். பெரும் பணம் புழங்கும் திரைப்படத்துறையில் இது அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
களத்தூர் கண்ணம்மா முதல் தமிழக மக்களுக்கு அறிமுகமான தனது உடலையே, தானமாக கொடுத்துள்ளவர். 37 வருடங்களாக நற்பணி இயக்கம் மூலமாக மாநிலம் முழுக்க நலத்திட்டங்களை செயல்படுத்தி வருபவர்.
மக்கள் சேவை
தமிழகத்தில் ஏரி தூர்வாறுவது, மரம் நடுவது, ரத்த தானம் செய்வது என்பதோடு, கமலின் நற்பணி இயக்கம், கடல் கடந்தும் சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது. தவறு என்று பட்டால் உடனடியாக அதை அச்சமின்றி வெளியிடக் கூடியவர் கமல். ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டத்தில் சென்னை வெள்ள பாதிப்பை அரசு சரியாக கையாளவில்லை என பகிரங்கமாக தெரிவித்தவர் கமல்.
ஓடிவந்த ஓ.பி.எஸ்
கமலின் பேச்சுக்காக அவரது ஏரியாவில் மின் இணைப்பை துண்டித்து அரசு பழிவாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதைய நிதி அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம், பக்கம்பக்கமாக கமலை கரித்துக்கொட்டி அறிக்கை வெளியிட வேண்டியதாயிற்று. அந்த அளவுக்கு கமலின் கருத்துக்கு ஜெயலலிதா முக்கியத்துவம் கொடுக்க காரணம், அவரது கருத்துக்கள் மக்களின் உணர்வுகளோடு ஒத்துப்போக கூடியவை என்பதுதான்.
கமலுக்காக ஜெ. வைத்த பிரஸ் மீட்
செய்தியாளர்களை கண்டாலே அஞ்சி ஓடிக்கொண்டிருந்த ஜெயலலிதா, ஒருகட்டத்தில், அவரே அழைத்து பிரஸ் மீட் வைத்தார். அதற்கு காரணம், விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டதால் அரசுக்கு எதிராக எழுந்த எதிர்ப்பலையை சமாளிப்பதுதான். கமல் கருத்து இப்படி ஆட்சி அதிகாரங்களை ஆட்டுவிக்கும் அளவுக்கு வலிமையானதாகவே இருந்து வருகிறது.
அரசாங்கமே பதறுகிறதே
இப்போதும், செய்தியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கமல் அளித்த அந்த ஒற்றை பதிலுக்காக அரசாங்கமே பதறிதுடிக்கிறது. எத்தனையோ எதிர்க்கட்சி தலைவர்கள் கூறும்போதுகூட கிணற்றில் போட்ட கல்மாதிரி இருந்த ஆளும் தரப்பு இப்போது, கமலுக்காக கதறி துடிக்கிறது. அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்ற அந்த வார்த்தை, உள்ளங்கை நெல்லிக் கனியாக அனைவருக்கும் தெரிந்ததுதான் என்பது அமைச்சர்களின் ஆவேசத்திற்கு காரணமாகியுள்ளது.
பதிலளிக்கும் லாவகம்
கமலிடம் மக்கள் கண்டு வியக்கும் ஒரு விஷயம், அவரும், திமுக தலைவர் கருணாநிதியை போலவே, வெகு புத்திசாலித்தனமாக பத்திரிகையாளர்கள் கேள்விகளை சமாளிப்பதை பார்த்துதான். கருணாநிதியிடமாவது ஒரு அளவுக்கு மேல் கேள்விகளை கேட்க முடியாது. கமலிடம் எப்படி, எப்படியெல்லாமோ கேள்விகள் வருகின்றன. எப்படி பந்து போட்டாலும் அதை அவர் சிக்சருக்கு தூக்குகிறார். பொதுவான லாஜிக் இருக்கிறதோ இல்லையோ, அப்போதைக்கு அதை யோசிக்க விடாத அளவுக்கு கமல் பேட்டிகள் அவருக்கே உரித்தான லாஜிக்கோடு அமைவது மக்களின் புருவத்தை தூக்க செய்துள்ளது.
பதிலின்றி தவிக்கும் தலைவர்கள்
விஜயகாந்த்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால் பதில் எப்படி வரும் என்பதையும், ரஜினி எப்படி சிக்கலான கேள்விகளை தவிர்த்து கிளம்புவார் என்பதையும், ஜெயலலிதா, மோடி போன்ற தலைவர்கள் பத்திரிகையாளர்கள் பக்கம் வராமல் தவிர்ப்பதையும் பார்த்த மக்களுக்கு கமலின் பதில்கள் ஒருவகை புது உணர்வை கொடுத்துள்ளன என்பது நிதர்சனம்.
Recommended Video
அரசியலுக்கு வந்தால் அவ்வளவுதான்
சென்னை வெள்ள பிரச்சினையில் கமலை, தமிழக அரசு கார்னர் செய்தபோது, இயக்குநர் பாரதிராஜா ஒரு விஷயத்தை சொன்னார். கமலை தேவையில்லாமல் சீண்டாதீர்கள். அவர் அரசியலை கற்றுக்கொண்டு வந்தால் தாங்க மாட்டீர்கள் என்றார். எந்த ஒரு விஷயத்திலும் முழு ஞானம் பெற வேண்டும் என்ற தேடுதல் உள்ள கமல் அரசியலில் இறங்கினாலும் அதையே செய்வார் என்ற எண்ணம் அரசியல் பார்வையாளர்களிடம் உள்ளது.
இதோ தகுதிகள்
சில அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டும், பச்சைத்தமிழர் அடையாளம், பொதுமக்கள் எதிர்பார்க்கும் சேவை குணம், எதிரிகளை சமாளிக்கும் அறிவு, வாக்குகளை ஈர்க்கும் பேச்சுத்திறமை, திரைப்பட புகழ், டெல்லியிலுள்ள லாபி என அரசியல்வாதிக்கு தேவையான 10 பொருத்தமும் பக்காவாக உள்ளவர்தான் கமல்.
எஸ்.வி.சேகர் ஐடியா
அதேநேரம், இதுமட்டும் போதுமா என்ற கேள்வியும் எழுகிறது. தீவிர அரசியலில் ஈடுபட ரஜினிக்கு உடல்நிலை ஒத்துழைக்காது என அவரது குடும்பத்தார் அக்கறைப்படும் இந்த சூழலில் கமல் அரசியலில் குதித்தார், ரஜினி அவருக்கு ஆதரவு தெரிவித்து பின்னால் இருந்து ஒத்துழைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவின் எஸ்விசேகரும் ஏறத்தாழ இதே கருத்தை ஏற்கனவே கூறியுள்ளார். ஒருபடி மேலேயே போய் அவர், விஜய், அஜித்தும் ரஜினியோடு கை கோர்க்க வேண்டும் என கூறியுள்ளார். கமல் வர வேண்டும் என்று அவர் தனது கருத்தை கூறவில்லை. ஆனால் அவரது லாஜிக்படி கமலும் கை கோர்க்கலாம்.
நெருக்கடி தொடர்ந்தால்
தமிழக அரசியலில் ஆளும் கட்சியிலுள்ள வெற்றிடம் கமலை அரசியலை நோக்கி ஈர்க்க வாய்ப்புள்ளது. எனவேதான் முன்கூட்டியே தனது ஆதரவை தெரிவித்து அவரை கூல் செய்ய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முயல்வதாக கூறப்படுகிறது. பல முனை போட்டியை ஸ்டாலினும் விரும்பவில்லையாம். ஆளும் கட்சி நெருக்கடி தொடர்ந்தால் கமல் தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்குவார் என்கிறார்கள் அவரை பற்றி அறிந்தவர்கள்.