"முதல்வர்"... ஓ.பன்னீர் செல்வம் பணிவாரா.. இல்லை துணிவாரா?
முதல்வர் பதவியை சசிகலாவிடம் விட்டுக் கொடுத்து விட்டு ஓ.பன்னீர் செல்வம் ஒதுங்குவாரா அல்லது துணிந்து எதிர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: முதல்வர் பதவியை சசிகலாவிடம் விட்டுக் கொடுத்து விட்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பணிந்து போவாரா அல்லது முடியாது என்று கூறி துணிந்து நிற்பாரா என்ற பெரும் விவாதம் கிளம்பியுள்ளது.
நாளை முதல்வராகப் பதவியேற்கப் போகிறார் சசிகலா, அதனால்தான் இன்று எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்... இப்படி செய்திகள் பரவி ஒரே பரபரப்பாக இருக்கிறது. ஆனால் இதுவரை அதற்கான அறிகுறியே இல்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது.
வெறுமனே எம்.பிக்களையும், எம்.எல்.ஏக்களையும் அவ்வப்போது கூட்டி வைத்து எதையோ பேசி கலைந்து போகச் செய்து வருகிறார் சசிகலா. எதற்காக என்றும் தெரியவில்லை. முதல்வராகும் ஆசையில் அவர் இருப்பது ஊரறிந்ததுதான். ஆனால் தடாலடியாக அதை அடைய முடியாத அளவுக்கு பல சிக்கல்கள் - வெளியில் தெரியாமலும், தெரிந்தும்.
முட்டுக்கொடுக்கும் முதல்வர்
முதல்வர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தை ஜஸ்ட் லைக் தட் தூக்கிப் போட்டு விட்டு அப்பதவியில் சசிகலாவை எளிதாக அமர வைத்து விட முடியும் என்பதுதான் அவர்களது தரப்பு ஆரம்பத்தில் போட்ட கணக்காகும். காரணம், ஓ.பி.எஸ் என்பவர் ஏதோ கறிவேப்பிலை போலத்தான் என்பது அவர்களது பார்வை. ஆனால் அதில் பல சிக்கல்கள் வந்து குவிந்தபோது அதை சசிகலா தரப்பு எதிர்பார்க்கவில்லை.
வலுவான பின்னணியில் ஓ.பி.எஸ்.
உண்மையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சிட்டிசன் படத்தில் வரும் அஜீத் போல பல அவதாரங்களுடன் சசிகலா குரூப்பின் பார்வையில் தெரிகிறார். காரணம், அவருக்குப் பின்னால் வலுவான மத்திய சக்தி. பாஜகவின் வலுவான ஆதரவு ஓ.பி.எஸ்ஸுக்கு உள்ளது. இதனால்தான் சசிகலா குரூப் அதிரடியாக எதையும் செய்ய முடியாமல் இப்படி கூடிக் கூடிக் கலைந்து சென்று கொண்டுள்ளது.
கவிழ்க்க முடியாது
முதல்வர் பதவியிலிருந்து விலக ஓ.பன்னீர் செல்வமும் கூட முழுமையாக தயாராக இல்லை. அதேசமயம் யாருடனும் பகிரங்கமாக மோதவும் அவர் தயாராக இல்லை. என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்பது போலத்தான் அவர் அமைதி காட்டி வருகிறார். தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு பாஜக முழு ஆதரவுடன் இருப்பதால் அவரைத் தொட முடியாத நிலையில் உள்ளது சசிகலா குரூப்.
பல விதங்களில் முயற்சி
ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்ட பல விதங்களிலும் சசிகலா தரப்பு முயற்சித்தபடிதான் உள்ளது. ஆனால் அவரை முழுமையாக வழிக்குக் கொண்டு வர முடியாத நிலைதான் உள்ளதாக கூறுகிறார்கள். அதேசமயம், சசிகலா தரப்பை எதிர்த்து அவர் இதுவரை எந்த அதிருப்தியையும் வெளிப்படையாக காட்டவில்லை. அதுதான் குழப்பமாக உள்ளது.
பணிவாரா.. துணிவாரா
ஓ.பன்னீர் செல்வம் முகத்தில் ஒரு விநாடி கூட குழப்பத்தை நாம் பார்க்க முடியவில்லை. அவ்வளவு தெளிவாக பேசுகிறார், செயல்படுகிறார். எனவே அவர் சசிகலா தரப்புடன் எந்த மாதிரியான நெருக்கத்தில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சசிகலா மிகக் குறுகிய காலத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அவர் முதல்வராகப் போவதாகவும் பேச்சுக்கள் கிளம்பி வருகின்றன. ஆனால் ஓ.பன்னீர் செல்வம் இதற்குப் பணிவாரா அல்லது எதிர்க்கத் துணிவாரா என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.