முறைகேடுகள் இல்லாமல் கலந்தாய்வு நடக்குமா? அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
நெல்லை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, நாளை தொடங்கும் நிலையில், முறைகேடுகள் நடக்காமல் உண்மையான காலி இடங்களுக்கு கலந்தாய்வு நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் நெல்லை மாவட்ட ஆசிரியர்கள்.
தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி துறை மூலமும், உயர்நிலை பள்ளிகள், மேனிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி துறை மூலமும் ஆண்டுதோறும் மே மாதம் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.
இந்தாண்டுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. இதில் நாளை நடக்கும் கலந்தாய்வில் அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களூக்கு மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் என பணி மாறுதல் நடக்கிறது. 20ம் தேதி அரசு நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கும், 22ம் தேதி அரசு நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் என்றும் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.
நெல்லை மாவட்டத்துக்கு கலந்தாய்வு, பாளை சராள் தக்கர் மேல்நிலைப்பள்ளியில் நடப்பதாக முதன்மை கல்வி அலுவலர் பாலா தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்துக்கு கலந்தாய்வு முதன்மை கல்வி அலுவலக வாளகத்தில் உள்ள சி.வ மேல்நிலைப்பள்ளியில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முறையாக உண்மையான காலி இடங்கள் தெரிவிக்கப்படுவதில்லை என ஆசிரியர்கள் குற்றச்சாட்டும் நிலை தொடர்கிறது. அது இந்த முறையாவது மாறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.