உப்பு, தண்ணீர், மருந்தகம், உணவகம்.. 'அம்மா' படம் மாறுமா?
சென்னை: தமிழக அரசுக்குப் புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது அம்மா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் படங்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது தகுதியிழந்தவராக ஜெயலலிதா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது படங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டப்படி முதல்வராக பதவி வகிக்கவும், தேர்தல்களில் போட்டியிடவும் தகுதியிழந்தவராக மாறியுள்ளார் ஜெயலலிதா. எனவே அவரது படத்தை தொடர்ந்து பயன்படுத்துவதில் சட்டச் சிக்கல்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இதுகுறித்து அவசரமாக பரிசீலிக்க வேண்டிய நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான புதிய அரசு உள்ளது.
அம்மா திட்டங்கள்
ஜெயலலிதா ஆட்சியின்போது அதிக வரவேற்பைப் பெற்ற திட்டங்களில் ஒன்றுதான் இந்த அம்மா திட்டங்கள்.
உப்பும்.. தண்ணீரும்
உப்பைத் தின்றால் உடனே தண்ணீர் குடிக்க வேண்டும்.. அதாவது உப்பிலிருந்து தண்ணீர் வரை பல்வேறு திட்டங்கள் அம்மா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அம்மா உணவகம்
இந்த வரிசையில் முதலில் தொடங்கப்பட்டது அம்மா உணவகம். சென்னையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது படிப்படியாக தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. மலிவு விலையில் இங்கு இட்லி, பொங்கல், பூரி உள்ளிட்ட உணவு வகைகளை விற்கிறார்கள்.
அம்மா குடிநீர்
அடுத்து பத்து ரூபாய் விலைக்கு அம்மா குடிநீர் பாட்டில்கள் அறிமுகமாகின. இது அனைத்து அரசுப் பேருந்து நிலையங்கள், பேருந்துகளில் விற்கப்பட்டன.
அம்மா மருந்தகங்கள்
அதேபோல அம்மா மருந்தகங்கள் என்ற பெயரில் மலிவு விலை மருந்துக் கடைகள் திறக்கப்பட்டன.
அம்மா உப்பு
அம்மா உப்பு என்ற பெயரில் மலிவு அயோடைஸ்டு உப்பு விற்பனையும் அறிமுகமானது.
அம்மா விதை
அதேபோல விவசாயிகளுக்காக அம்மா விதைகள் திட்டமும், புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் அடங்கிய அம்மா பரிசுப் பெட்டகம் திட்டமும் தொடங்கப்பட்டது.
கடைசியாக அம்மா சிமென்ட்
இந்த வரிசையில் வந்த கடைசித் திட்டம் அம்மா சிமென்ட். இந்த அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நாள்தான் சிறைக்குப் போய் விட்டார் ஜெயலலிதா.
படம்.. அம்மா.. இரண்டுக்கும் சிக்கல்
தற்போது ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறைக்கும் போய் விட்ட நிலையில் ஒரு குற்றவாளியின் படத்தை இந்தத் திட்டங்களில் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், அனைத்து அம்மா திட்டப் பொருட்களிலும் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றுள்ளது.
டிராபிக் ராமசாமி கேஸ் போட்டாலும் போடலாம்
ஒரு வேளை அம்மா என்ற பெயர் பொதுவானது என்று கூறி அதிமுக அரசு அதை நியாயப்படுத்தினாலும் கூட ஜெயலலிதாவின் படத்தை அது பயன்படுத்தினால் அதில் சட்டச் சிக்கல் வரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக டிராபிக் ராமசாமி போன்ற பொது நல சேவகர்கள் யாராவது கேஸ் போட்டாலும் போடலாம்....!