திமுகவில் மு.க.அழகிரிக்கு உண்மையிலேயே ஆதரவு உள்ளதா?
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தன் பக்கம் தான் இருப்பதாக மெரினாவில் வைத்து இன்று மு.க.அழகிரி அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் போல திமுகவில் அழகிரியின் தர்மயுத்தம் நடைபெறுவதாக ஒரு பேச்சு பல தளங்களிலும் எழுந்துள்ளது.
உண்மையிலேயே, அழகிரிக்கு திமுகவின் ஆதரவு உள்ளதா அல்லது அவர் கருத்து மீடியா பரபரப்புக்கானதுதானா என்ற கேள்விகளுக்கு விடை தேடினோம். பாருங்கள்.
திமுகவில் நீக்கப்பட்ட அழகிரி
"திமுக முன்னாள் தென் மண்டல அமைப்புச்செயலாளர் மு.க.அழகிரி கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், தலைமையையும், கழக முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் திமுகவில் இருந்து அறவே நீக்கி வைக்கப்படுகிறார்" என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி உத்தரவை பொதுச்செயலாளர் அன்பழகன் ஒரு அறிக்கையில் தெரிவித்தது, 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆகும்.
ஓங்கிய ஸ்டாலின் கை
இதன்பிறகு திமுகவில் உள்ள முன்னணி நிர்வாகிகள் யாருமே அழகிரியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. செயல் தலைவர் ஸ்டாலின் கைதான் திமுகவில் ஓங்கிய வண்ணம் உள்ளது. கனிமொழியை பொறுத்த அளவில் திமுகவிற்கு டெல்லி குரலாக உருவாக்கியுள்ளார். தமிழகத்துக்கு ஸ்டாலின், டெல்லிக்கு கனிமொழி என்ற வகையில் கருணாநிதி வியூகம் அமைத்து இருந்தார். டெல்லியின் லாபி மிகவும் வலிமையானது. எனவே அதை எதிர்கொள்ள கருணாநிதி முன்பு மிகவும் நம்பியது முரசொலி மாறனைத்தான். அவரது மறைவுக்குப் பிறகு கனிமொழி அந்த இடத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
செல்வாக்கை இழந்த அழகிரி
ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் கட்சியில் செல்வாக்கு பெற்றுள்ள நிலையில் அழகிரி படிப்படியாக தனது செல்வாக்கை இழந்தார். மதுரை மாவட்டத்தில் மட்டும் அவருக்கு செல்வாக்கு இருந்தபோதிலும் கூட, கடந்த சில ஆண்டுகளாக அதுவும் குறைந்தது. தனது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடி வந்த அழகிரி, ஆதரவாளர்கள் வெளியேறியதன் காரணமாக பிறந்த நாள் விமர்சைகளை கூட குறைத்துவிட்டார்.
திடீர் கவனம்
இந்த நிலையில் கருணாநிதி உடல்நலம் குன்றிய பிறகு அழகியின் பெயர் அவ்வப்போது மீடியாக்களில் அடிபட்டு வருகிறது. ஸ்டாலினும், அழகிரியும் ஒன்றாக இருந்து மருத்துவமனையில் கருணாநிதி உடல் நலம் விசாரித்தனர். கருணாநிதி இறுதி சடங்கில், இருவரும் ஒன்றாக பங்கேற்றனர். மூத்த மகன் அழகிரி என்றபோதிலும்கூட, கருணாநிதி உடலில் போர்த்தப்பட்ட தேசிய கொடி ஸ்டாலினிடம்தான் வழங்கப்பட்டது.
குடும்பத்தில் கோரிக்கை
திடீரென அழகிரி பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் கூட, நிஜத்தில் ஸ்டாலினுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படுத்தாது என்று தெரிகிறது. அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், அவருக்கு நல்ல பதவி தரவேண்டும் என்று குடும்பத்தில் உள்ள சிலர் ஸ்டாலினை வலியுறுத்தியதாகவும், ஆனால் திமுகவிற்கு ஏற்பட்ட கெட்ட பெயரை நீக்குவதற்கு ஸ்டாலின் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, இது குந்தகம் ஏற்படும் என்று கட்சி முன்னணி தலைவர்கள் எச்சரித்ததாகவும், கூறப்படுகிறது.
கருணாநிதியே சேர்க்கவில்லை
திமுக தலைவர் கருணாநிதி கடைசி வரை அழகிரியை கட்சியில் சேர்க்காத போது நாம் ஏன் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ற கேள்வி ஸ்டாலின் முன்பு எழுந்துள்ளதாகவும், எனவே, அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க ஸ்டாலின் மறுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் குடும்ப உறுப்பினர்கள் மூலம் அழகிரிக்கு சென்ற பிறகு கடைசி முயற்சியாக இன்று மெரினாவில் அவர் திமுக தொண்டர்கள் தனது பக்கம் உள்ளதாக பேட்டியளித்துள்ளார் என கூறப்படுகிறது.
நிர்வாகிகள் அனைவரும் ஸ்டாலின் பக்கம்
திமுக நிர்வாகிகள் அனைவருமே ஸ்டாலின் கட்டுப்பாட்டில் வந்து விட்டனர். இது பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்து விட்டது என்கிறார்கள் அக்கட்சியினர் பிரமுகர்கள். நாளை நடைபெற உள்ள திமுக செயற்குழுக் கூட்டத்தில் கனிமொழிக்கு தமிழகத்தில் முன்னிலைப்படுத்தும் சில பதவியை கொடுத்து, பெண்கள் ஆதரவை திமுக பக்கம் இன்னும் அதிகமாக்க ஸ்டாலின், முயலக்கூடும். இதன்மூலம் கனிமொழி தரப்பினரும் மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் அழகிரிக்கு, கட்சிக்குள்ளும், குடும்பத்திற்குள்ளும் பெரிய ஆதரவு கிடைக்கப் போவதில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சவால் இல்லை
இப்போது, ஸ்டாலினின் கவனம் முழுக்க திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் சட்டசபை இடைத்தேர்தலில் திமுகவை வெற்றிபெறச் செய்வதும், வயது முதிர்வு காரணமாக பணியாற்ற முடியாமல் உள்ள திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு மாற்றாக மிகவும் நம்பிக்கையான ஒருவரை அப்பதவியில் நியமிப்பது மட்டுமே தானே தவிர, அழகிரி சமாளிப்பது அவருக்கு ஒரு பெரிய விஷயமே கிடையாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். எனவே அழகிரியின் பேட்டி, இன்றைய மீடியா பரபரப்புக்கு மட்டுமே பயன்படும் என்றும் அவர்கள் ஆணித்தரமாகக் கூறுகிறார்கள்.