அதெல்லாம் கிடையாது, அதிமுக மறுபடியும் அழைத்தால் போக மாட்டோம்... மூ.மு.க. "ஸ்டிரிக்ட்"!
சென்னை: அதிமுக கூட்டணிக்கு மீண்டும் அழைத்தாலும் செல்ல மாட்டோம் என மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.
முக்குலத்தோர் கட்சிகளான பார்வர்டு பிளாக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகியவை இம்முறையும் அதிமுக கேட்காமலேயே அந்தக் கட்சிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தன. ஆனால், இந்தக் கட்சிகளில் யாருக்கும் தொகுதியை ஒதுக்கவில்லை அதிமுக.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவை ஆதரித்து வரும் மூவேந்தர் முன்னணிக் கழகம், இம்முறை 5 தொகுதிகளைக் கேட்டுள்ளது. ஆனால், ஒரு தொகுதி தருவதாகக் கூறிய அதிமுக, கடைசி நேரத்தில் கைவிரித்து விட்டது. இதனால், அதிமுக மீது மூவேந்தர் முன்னணிக் கழகத்திற்கு வருத்தம் ஏற்பட்டது.
இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய மூவேந்தர் முன்னணிக் கழகம், இனி மீண்டும் கூட்டணிக்கு அழைத்தாலும் அதிமுக பக்கம் செல்லப் போவதில்லை என முடிவெடுத்துள்ளது.
சென்னை அபிபுல்லா சாலையில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் தலைமையில் இன்று நடந்த அவசர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனத் தலைவர் சேதுராமன் இவ்வாறு தெரிவித்துள்ளார்
இந்த கூட்டத்தில் பார்வர்ட் பிளாக், முக்குலத்தோர் பாசறை, பசும்பொன் தேசிய கழகம் உள்ளிட்ட 18 தேவர் சமூகத்தை சேர்ந்த கட்சிகள் மற்றும் அமைப்புகள் கலந்துகொண்டன.
அதிமுகவுடன் கூட்டணி இல்லை என முடிவெடுத்ததைத் தொடர்ந்து, சட்டசபைத் தேர்தலில் வேறு எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.