அவசர சட்டம் என்பது அல்வா கொடுப்பதை போன்றது.. போராட்டத்தை கைவிட மாட்டோம்: மதுரை மக்கள்
மதுரை: ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல, மதுரை தமுக்கம் மைதானத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் போராடி வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக இன்று ஆளுநர் அவசர சட்டத்தில் கையெழுத்திட்ட நிலையில், தமுக்கம் மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
தமுக்கம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் சிலர் கூறுகையில், அவசர சட்டத்தை எப்போதோ இயற்றியிருக்கலாமே. ஏன் இப்போது செய்கிறார்கள். தமிழக அரசும், மத்திய அரசும், மக்களை வஞ்சிக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
அவசர சட்டம் 6 மாதங்கள்தான் நீடிக்கும். இதன் மூலம் மாணவர் போராட்டத்தை கலைக்கத்தான் முயற்சி செய்கிறார்கள். அவசர சட்டம் என்பது அல்வா கொடுக்கும் விஷயம். மதுரைக்காரங்க நாங்களே பல பேருக்கு அல்வா கொடுத்திருக்கோம். எங்களுக்கே அல்வா தருகிறார்கள். நிரந்தர சட்டம் கொண்டுவராவிட்டால் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவை கருப்பு தினமாகவே கொண்டாடுவோம்.
இவ்வாறு மதுரை தமுக்கம் மைதானத்திலுள்ள இளைஞர்கள் சிலர் தெரிவித்தனர்.