பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அதிமுகவில் புதிய பதவி: கட்சி ஆலோசகராகிறார்?
சென்னை: தேமுதிகவில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு விரைவில் அதிமுகவில் புதிய பதவி தரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா கையினால் அண்ணாவிருது பெற்றுக் கொண்ட பண்ருட்டி ராமச்சந்திரன், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு பிரச்சாரம் செய்வேன் என்று அறிவித்தார்.
அவரை மாநிலம் முழுவதும் 40 தொகுதிகளிலும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள முதல்வர் ஜெயலலிதா ஓகே சொல்லிவிட்டராம்.
அதிமுக பண்ருட்டியார்…
தேமுதிகவில் இருந்து வெளியேறிய உடனே பண்ருட்டி ராமச்சந்திரன், அதிமுகவில் இணையப் போவதாக பேசப்பட்டது. ஆனால் அதை உறுதி படுத்தவில்லை.
அண்ணா விருது
ஆனால் குடியரசு தினத்தன்று முதல்வர் ஜெயலலிதா கையால் அண்ணாவிருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட உடனே அதிமுகவில் பண்ருட்டியார் இணையப்போவது உறுதியானது.
தேமுதிகவிற்கு எதிராக
விருது பெற்றுக் கொண்ட உடனேயே பேட்டியளித்த பண்ருட்டியார், மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக சொன்னார். திமுக உடன் தேமுதிக கூட்டணி வைத்தால் தேமுதிகவிற்கு எதிராகவும் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்றார்.
அரசியல் ஆலோசகர்
அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக கட்சியின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டியாரை நியமிக்க முடிவு செய்துள்ளனராம்.
தென்மாவட்ட தலைவர்கள்
அதிமுக ஆதரவு நிலையில் ஜான்பாண்டியன், ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட தென்மாவட்ட தலைவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அவர்கள் விரைவில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.