கியரை மாற்றி கொஞ்சம் அதிரடிக்கு மாற வேண்டும் ஸ்டாலின்..!
தொண்டர்களின் எதிர்பார்ப்பை ஸ்டாலின் பூர்த்தி செய்வாரா?
சென்னை: வரப்போகிற திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் திமுக எந்த அளவுக்கு ஈடுபட்டுள்ளது என்பதே தற்போதைய கேள்வி!!
கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சி தலைவரை தொண்டர்கள் அதிகமாக நம்பி கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு இடைத்தேர்தல்களையும் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயமும் உள்ளது. இதுபோக புதிய திமுக தலைவர் இந்த தேர்தல்களை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
தீவிரம் இல்லை
ஆனால் திமுக தரப்பிலிருந்து நமக்குத் தெரிய வரும் தகவல்கள் எல்லாம் திருப்திகரமாகவே இல்லை. இந்த இடைத்தேர்தலை எதிர்நோக்குவதைவிட முழு பொதுத் தேர்தலையே ஸ்டாலின் எதிர்கொள்ள விரும்புகிறார் என்று சொல்லப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் வேறு வருகிறது. இப்படி நெருக்குதல்கள் இருக்கும் நிலையில் இடைத் தேர்தல் பணிகளில் திமுக இன்னும் தீவிரமாக இறங்கவில்லை என்கிறார்கள்.
அழகிரி அச்சுறுத்தல்
ஏன் இந்த சுணக்கம் என்று தெரியவில்லை. தலைமை பொறுப்பை ஏற்று முடித்ததுமே, அழகிரி பஞ்சாயத்து ஓடியது உண்மைதான். கட்சியின் மூத்த தலைவர்களின் வார்த்தைகளுக்கு முக்கியம் கொடுத்து அழகிரியை கண்டுக்காமல் போனதும் நடந்தது. அதே சமயத்தில் அழகிரிக்கு எதிராக யாரும், எதுவும் பேசிவிடக்கூடாது என்று நிர்வாகிகளிடம் கடிவாளம் போட சொன்னதும் நடைபெற்றது. கெஞ்சி, மிரட்டி, பணிந்து, துணிந்து எல்லா ரூட்-களிலும் போய் அவரும் ஓய்ந்துவிட்டு அடுத்ததாக என்ன செய்யலாம் என இறங்கிவிட்டார்.
பொறுமையான அணுகுமுறை
அழகிரி விஷயம் தணிந்த பிறகும் கட்சி நடவடிக்கைகளில் ஸ்டாலின் தீவிரமாக இறங்கவில்லை என்பதே உண்மை. பொதுவாகவே அரசியலை பொறுத்தவரை ஸ்டாலின் ஒரு மென்மையான போக்கினை கடைப்பிடிக்கிறார். பொறுமையான அணுகுமுறையை தேர்ந்தெடுத்து அதில் பயணித்து வருகிறார். ஒவ்வொரு அரசியல் அசைவுகளையும் நிதானமாகத்தான் கையாள்கிறார். இதையெல்லாம் மறுப்பதற்கில்லைதான். ஆனால் இவையெல்லாம் எல்லா காலங்களிலும் தேவையா? என்பதுதான் கேள்வியாக உள்ளது.
சமுதாய வாக்குகள்
இடைத்தேர்தலிலும் திமுகவினரின் களப்பணி குறைவாக உள்ளது. இதில் ஃபர்ஸ்ட் ரேங்கில் உள்ளவர் டிடிவிதான். ஆர்,கே.நகரை போல எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று எப்பொழுதோ களத்தில் குதித்து வேலையை ஆரம்பித்து விட்டார். போதாதற்கு தன் சமுதாய வாக்குகள் கண்டிப்பாக தனக்குத்தான் விழும் என்றும் 200 சதவீதம் டிடிவி நம்பியுள்ளார். அப்படி தினகரன் வெற்றி பெற்றுவிட்டால் அது திமுகவுக்கு மிகப்பெரிய அவமானம்.
அதிமுக களப்பணி
பொதுவாக இடைத்தேர்தல்கள் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும். ஆனால் ஆர்.கே.நகரில் நடந்தது வேறு. அந்த வகையில் இந்த தொகுதிகளிலும் மானம் போய் விடக் கூடாது என்று ஆளும் தரப்பும் கவனமாக உள்ளது. வேலைகளில் இறங்கி விட்டது.
திருப்பரங்குன்றம்
ஏற்கனவே ஆர்.கே.நகரில் வரலாறு காணாத தோல்வி திமுகவுக்கு ஏற்பட்டுவிட்டது. இப்போது 2 இடைத்தேர்தல்களிலும் திமுக வெற்றி பெறாவிட்டால் கடுமையான சரிவு கட்சிக்கும் தலைமைக்கும் ஏற்பட்டு விடும். இந்த சரிவு ஏற்படாமல் இருக்க 2 வழிதான் உண்டு. ஒன்று இடைத்தேர்தலில் திமுக போட்டியிடாமல் ஒதுங்குவது, அல்லது அழகிரியை கட்சிக்குள் இழுத்து திருப்பரங்குன்றத்தை ஒதுக்கி அவர் பொறுப்பில் விட்டுவிடுவது.
திருவாரூரில் சகோதரர்களா?
இடைத்தேர்தல்களில் திமுக போட்டியிடாமல் போய்விட்டால் அதுவும் திமுகவுக்கு சரிவுதான். ஏனென்றால் எம்எல்ஏ-வாகி ஒரு வருடத்திற்குள் அடுத்த தேர்தலை சந்திக்க டிடிவியே தயாராகிவிட்டார். அவ்வளவு எதற்கு, அப்பப்போ அரசியலுக்குள் வந்துபோகும் டி.ராஜேந்தர்கூட போட்டியிட முடிவு செய்துவிட்ட நிலையில் ஒரு பாரம்பரிய கட்சி, அதுவும் ஒன்று தங்கள் சொந்த ஊரில் நிற்க முடியாமல்போனால் நிச்சயம் அது ஒரு மைனஸ்தான். ஒருவேளை திருவாரூரில் திமுக ஒருபுறமும், அழகிரி ஒருபுறம் என போட்டியிட்டால் கருணாநிதி குடும்பம் குறித்து அந்த தொகுதியில் எந்த மாதிரியான வாக்குகள் விழும், அண்ணன்-தம்பி குறித்து தொகுதி மக்கள் என்ன நினைப்பார்கள் என்றும் தெரியவில்லை.
அதிமுக - ஜூனியர்ஸ்
தமிழகத்தில் ஏராளமான பிரச்சனைகள் கொட்டி கிடக்கின்றன. ஆனால் திமுக தரப்பு இவற்றினையும் கையில் முழுமையாக எடுத்து களத்தில் குதிக்கவில்லை. வெறுமனமே போராட்டங்களை மட்டுமே நடத்தி வருகிறது. இதனால் எந்த தாக்கத்தையும் அது ஏற்படுத்த முடியவில்லை. தமிழகத்தில் தற்போது மிக மிக பலமான கட்சி திமுக. அதிக அளவு மூத்த தலைவர்களையும், சிறந்த அனுபவங்களை பெற்ற நிர்வாகிகளையும் கொண்டது திமுகதான். இவர்களுடன் ஒப்பிடும்போது அதிமுகவில் இருப்பவர்கள் முதலமைச்சர் உட்பட எல்லோருமே திமுகவுக்கு ஜூனியர்ஸ்தான்.
கருணாநிதி, ஜெ. இருந்தால்...
இந்த சூழ்நிலையையும், இப்படி ஒரு தமிழக அரசியல் நிலவரத்தையும் திமுக மிக அழகாகவும் நேர்த்தியாகவும் கையாளலாம். ஆனால் நாள்தோறும் தமிழிசையுடன் ட்விட்டரில் சண்டை போட்டுக் கொண்டும், ஊழலை கண்டித்து பேருக்கு ஒரு ஆர்ப்பாட்டமும் நடத்தினால் போதுமா? ஒவ்வொரு மாவட்டத்திலும் பலமுள்ள திமுக நிர்வாகிகள் பலவித வடிவங்களில் போராடி, மத்திய, மாநில அரசுகளுக்கு இந்நேரம் நெருக்கடி கொடுத்திருக்கலாமே? இதுவே கருணாநிதியோ, ஜெயலலிதாவுக்கோ இதே சூழ்நிலை அமைந்திருந்தால், அவர்கள் இருவருமே இப்பிரச்சனைகளை அடித்து நொறுக்கி ஒரு முடிவினை துணிந்து எடுத்து ஒரு கலக்கு கலக்கி இருப்பார்கள்.
அதிரடி தேவை
எனவே ஸ்டாலினின் அணுகுமுறையில் ஒரு மாற்றம் தேவை. அதுவும் அதிரடி மாற்றம் வேண்டும். களத்தில் தீவிரமாக இறங்க வேண்டும். தொண்டர்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கை ஊட்ட வேண்டும். ட்விட்டர் அரசியலை விட்டுவிட்டு, மிதமான நாகரீகமான போக்கையும் ஓரளவு விட்டுவிட்டு, கொஞ்சம் அதிரடி கூட்ட வேண்டும். ஆர்.நகரில் விட்டதை, 2 தொகுதிகளிலும் திமுக பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. எதிர்பார்ப்பை ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?