தமிழக பாஜக பொறுப்பாளராக பிரதாப் ரூடி நியமனம்; ரஜினியை நம்பி பாஜக இல்லை.. ஆட்சி கனவு நனவாகுமா?
2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறப் போகும் சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து பல அரசியல் கட்சிகள் வியூகம் அமைக்கத் தொடங்கியுள்ளன.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 2016ல் பா.ஜ.க ஆட்சியை பிடிக்கும்' என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழசை சவுந்தர்ராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தமிழக பாஜக பொறுப்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடியை சந்தித்து பேசிய சூட்டோடு சூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை அறிவித்துள்ளார்.
வாக்கு வங்கி
தமிழகத்தில் தற்போது பாஜகவில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு கோடி பேரை கட்சியில் இணைக்க பாஜக இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தமிழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி நவம்பர் 1-ம் தேதி தொடங்கப் போகிறதாம்.
ரஜினியை நம்பியில்லை
நேற்றுவரை ரஜினிகாந்த் பாஜகவிற்கு வரவேண்டும் என்று மாறி மாறி அழைப்பு விடுத்தனர். ஆனால் இப்போதே, நடிகர் ரஜினிகாந்தை நம்பி பாஜக இல்லை என்றும் தமிழசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
கட்சியை பலப்படுத்த
நடிகர் ரஜினிகாந்தை தங்கள் பக்கம் இழுக்க மேற்கொண்ட முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த பாஜக புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. இதன் அடுத்த அஸ்திரமாகவே தமிழக பாஜக பொறுப்பாளராக ராஜீவ் பிரதாப் ரூடி நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தென்னக மாநிலங்களுக்கு
மத்தியில் ஆட்சியில் பிடித்த கையோடு மாநிலங்களிலும் தனது அதிகார பலத்தை விஸ்தாரப்படுத்தி வரும் பாஜக, தெற்கே கர்நாடகம், தமிழ்நாடு, கேரளாவை குறிவைத்து காய்களை நகர்த்த தொடங்கியுள்ளது.
ரஜினியை இழுக்கத் திட்டம்
தமிழகத்திலும் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பாஜக, நடிகர் ரஜினிகாந்தை தங்கள் பக்கம் இழுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பலமுறை ரஜினியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவரது தூதுவர் ரஜினியை சந்தித்ததாகவும் கூறப்பட்டது.
வீட்டுக்குப் போன தமிழிசை
மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நவராத்திரி கொலு விழாவுக்காக ரஜினி வீட்டுக்கு சென்றார். அப்போது, ரஜினி பாஜகவுக்கு வர வேண்டும் என்பதை அவரது குடும்பத்தாரிடம் வலியுறுத்தினார்.
கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம்
ஆனால், ரஜினியோ, கருணாநிதியிடமும் பேசுவேன், ஜெயலலிதாவுக்கும் கடிதம் எழுதுவேன், விஜயகாந்திடம் நட்பு பாராட்டுவேன் என்று கூறி வருகிறார். தான் எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை என்று ஒதுங்கியே விட்டார்.
லிங்காவுக்கு சிக்கல்
பாஜகவின் அழைப்பை ஆரம்பத்தில் ரஜினி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், மீடியாக்கள் தொடர்ந்து பூதாகரமாக்கவே, இதனால் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் ‘லிங்கா' படத்துக்கு பிரச்சினை வந்துவிடக் கூடாது என்று நினைத்து, பாஜகவில் சேரும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லை என்று தனக்கு நெருக்கமானவர்களை விட்டு கூறியுள்ளார்.
பொறுப்பாளரை மாற்று
ரஜினியை இழுக்கும் முயற்சி பின்னடைவு ஏற்பட்டதால் அடுத்த கட்டமாக கட்சியைப் பலப்படுத்த வேறு வழிகளை பாஜக தலைமை மேற்கொண்டுள்ளது. அதற்காகவே பீஹார் மற்றும் மகாராஷ்டிரத்தில் பாஜகவை சாதிக்க வைத்த ராஜீவ் பிரதாப் ரூடியை தமிழக பொறுப்பாளராக நியமித்துள்ளது.
அமீத்ஷாவின் நண்பர்
பாஜகவை தமிழகத்தில் காலூன்ற செய்ய வேண்டும் என்பது கட்சி மேலிடத்தின் நீண்ட நாள் கனவு. எனவேதான் மோடி மற்றும் அமீத் ஷாவுக்கு நெருக்கமான ராஜீவ் பிரதாப் ரூடி தமிழகத்தின் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
தனித்து களமிறங்கி
மராட்டியத்தில் சிவசேனாவுடனான 25 ஆண்டு கால கூட்டணியை முறித்துக் கொண்டு தனித்துப் போட்டியிட்ட பாஜக, 122 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அந்த மாநில பொறுப்பாளராக இருந்த ரூடி, தீவிரமாக செயல்பட்டும், 700 கூட்டங்களை நடத்தியும் பாஜக வெற்றிக்கு வழி வகுத்தார்.
தமிழகத்திலும் சாதிக்குமா?
அதை மனதில் வைத்துதான் இப்போது, தமிழக பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ரஜினியை கை கழுவிவிட்ட பாஜக, 2016 தேர்தலில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் ரூடியை பாஜக தலைமை களமிறக்கியுள்ளது. தமிழகத்தில் கூட்டணி அமைக்குமா? அல்லது தனித்து களமிறங்கி தன் பலத்தை நிரூபிக்குமா என்பதே அரசியல் நோக்கர்களின் கேள்வியாகும்.
2016 கனவு
தமிழகத்தில் 2016ல் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கனவு காண்கின்றன. திமுகவோ மெகா கூட்டணி அமைக்க இப்போதே களமிறங்கியுள்ளது. அதிமுக ஏற்கனவே தனித்து களமிறங்கி தன் பலத்தை நிரூபித்துள்ளது. இதற்கிடையே பாஜகவும் ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும் என்று கனவு காண்கிறது. இம்முறையும் 5முனை போட்டி அமைந்தால் வெற்றி யாருக்கு என்பதை சொல்லித் தெரியவேண்டாம் என்று கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.