பெரும்பான்மையை இழந்த எடப்பாடி அரசு கவிழ்க்கப்படுமா? டிடிவி தினகரன் திட்டம் என்ன தெரியுமா?
சென்னை: டிடிவி தினகரனை சந்தித்து பேசும் அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை கலைக்க அவர்கள் முயற்சி செய்வார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
டிடிவி தினகரன் அதிமுக பக்கம் தலைகாட்ட கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தடாலடி பேட்டியளித்தார். அமைச்சர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பக்கம் சாய்ந்துள்ளதால் இந்த நிலைப்பாட்டை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.
ஆனால், தினகரனோ பொறுத்திருந்து பாருங்கள் என எச்சரிக்கைவிடுத்தார். அவரது எச்சரிக்கை இன்று காட்சிக்கு வந்துவிட்டது. இன்று மதியம் 2 மணிவரையிலான நிலவரப்படி, டிடிவி தினகரனை 22 அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேசியுள்ளனர். இந்த எண்ணிக்கை கூடவும் வாய்ப்புள்ளது.
மூன்று அணிகள்
எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பி.எஸ் அணி, டிடிவி தினகரன் அணி என 3 அணிகளாக அதிமுக பிரிந்துள்ள இந்த சூழ்நிலையில், டிடிவி தினகரனை சந்தித்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.
பெரும்பான்மை
தினகரனை சந்தித்த எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அரசுக்கு எதிரானவர்கள் என்பது, ஒன்றும், ஒன்றும், இரண்டு என்பதை போல எளிதாக விடை காணக்கூடிய கணக்குதான். அப்படி பார்த்தால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அரசு, தார்மீக ரீதியாக பெரும்பான்மையை இழந்துவிட்டது என்றுதான் சொல்லலாம்.
ஆட்சி நிலைக்குமா?
இப்போது மக்கள் முன்பு எழும் கேள்வி என்பது, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆட்சியை கலைப்பார்களா என்பதுதான். இதுகுறித்து அதிமுக வட்டாரங்களிலும், அரசியல் நிபுணர்களிடமும் பேச்சுக்கொடுத்தோம்.
மிரட்டல் ஆயுதம்
அவர்கள் ஒட்டுமொத்தமாக கூறும் கருத்து என்பது, டிடிவி தினகரன் தரப்பு, இப்போதைக்கு ஆட்சியை கலைக்க முற்படாது என்பதுதான். தனக்குள்ள எம்எல்ஏக்கள் பலத்தை காண்பித்து எடப்பாடி பழனிச்சாமி அரசை மிரட்டியே காரியம் சாதித்துக்கொள்வதுதான் மிகச்சிறந்த வாய்ப்பாக இருக்க முடியும் என்பதுதான் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் கணக்கு என்கிறார்கள்.
தேர்தல் பயம்
தங்க முட்டையிடும் வாத்தை யாரும் அறுத்து சாப்பிட மாட்டார்கள் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஏனெனில் ஆட்சியை கலைத்துவிட்டால், அதன்பிறகு நடைபெறும் தேர்தலில் மீண்டும் தாங்கள் ஆட்சிக்கு வர முடியாது என்பதே கள யதார்த்தம் என்பதை எடப்பாடி மட்டுமல்ல சசிகலாவும் அறிந்து வைத்துள்ளார். எனவே ஆட்சியை கலைத்து கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பை வீணடிக்க அவர் விரும்ப மாட்டார்.
ஆட்சிக்கு ஆபத்து இல்லை
அதேநேரம், கீரியையும், பாம்பையும் சண்டை போடச் செய்வதாக ஏமாற்றி வித்தைகாட்டி சம்பாதிக்கும் வித்தைக்காரனை போல, ஆட்சியை கலைக்க எங்களிடம் பலம் உள்ளது என்பதை காட்டி எடப்பாடி அரசை மிரட்டுவார்கள் சசிகலா தரப்பினர் என்கிறார்கள். அதனால்தான், இன்னும் 2 மாதங்கள் கெடு கொடுப்பதாக டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அந்த கெடு நேரத்திற்குள் எல்லோரும் சமரசமாகி ஆட்சியை நடத்தவே முனைவார்கள். ஆட்சி உடனே கலைய வாய்ப்பு இல்லை என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.