கடந்த முறை தப்ப விட்ட மாணிக் தாகூரை இந்த முறை மண்ணைக் கவ்வ வைப்பாரா வைகோ?
சென்னை: விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் மாணிக் தாகூரே நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த முறை சொற்ப வாக்குகளில் வைகோவைத் தோற்கடித்தவர் இந்த தாகூர். அப்போதே இந்த வெற்றியில் மோசடிகள் நடந்ததாக சர்ச்சையும் வெடித்தது.
இந்த முறை புதிய கூட்டணியில் இணைந்து விருதுநகரில் களம் காணும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நிச்சயம் தாகூரை வெல்வார், வெற்றிக் கனி பறிப்பார், நாடாளுமன்றம் செல்வார் என்ற பெருத்த நம்பிக்கையில் மதிமுகவினர் உள்ளனர்.
விருதுநகரில் நின்ற வைகோ
கடந்த 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் வைகோ. அவரை எதிர்த்துக் களம் கண்டவர் காங்கிரஸ் கட்சியின் மாணிக் தாகூர்.
யாரென்றே தெரியாத தாகூர்
அந்தத் தேர்தல் வரைக்கும் மாணிக் தாகூர் யார் என்றே யாருக்கும் தெரியாது. அப்படி ஒரு வேட்பாளர் அவர். இதனால் வைகோ எளிதாக வெல்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
வாக்கு எண்ணிக்கையில் மகா குழப்பம்
ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது மிகப் பெரிய அளவில் குழப்பங்கள் அரங்கேறின.
பதிவான ஒரு வாக்கு.. எண்ணப்பட்டது வேறு வாக்கு
அந்தத் தேர்தலில் விருதுநகரில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 800 வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டது. ஆனால் எண்ணப்பட்டதோ, 7 லட்சத்து 67 ஆயிரத்து 563 என்று தகவல்கள் வெளியாகின.
15,764 வாக்கு வித்தியாசத்தில் வைகோ தோல்வி
இப்படி பெரும் குழப்பமாக நடந்த வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் 15, 764 வாக்குகள் வித்தியாசத்தில் வைகோ தோல்வி அடைந்ததாக அறிவிப்பு வெளியானபோது மதிமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
திமுகவின் சதி என புகார்
வைகோ தோல்வி அடைந்ததற்கு அப்போது ஆட்சியில் இருந்த திமுகவின் சதியே காரணம், மு.க.அழகிரிதான் இதன் பின்னணியி்ல் இருந்தார் என்றும் அப்போது பரபரப்பு ஏற்பட்டது.
மீண்டும் மோதல்
இந்த நிலையில் இப்போது மீண்டும் விருநகரில் வைகோவும், மாணிக்கும் மோதவுள்ளனர். ஆனால் தற்போது சூழல் மாறியுள்ளது.
அழகிரி கை கொடுப்பாரா
அப்போது திமுக முகாமில் இருந்த அழகிரி அங்கிருந்து நீக்கப்பட்டு விட்டார். சமீபத்தில் இவர் வைகோவைச் சந்தித்துப் பேசியிருந்தார். பாஜகவுக்கு ஆதரவாகவும் அழகிரி திரும்பியுள்ளார். திமுகவும் ஆட்சியில் இல்லை. அதிமுகவும் வைகோவுக்கு எதிராக பெரிய அளவில் செயல்படாது என்றே கருதப்படுகிறது.
ரத்தினவேலுவை சமாளிப்பது எளிது
திமுக சார்பில் விருதுநகரில் ரத்தினவேலு நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஒரு காலத்தில் தீவிர அழகிரி விசுவாசி. இப்போதும் கூட அப்படித்தான் என்கிறார்கள். ஆனால் இவர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதேசமயம், வைகோவை விட பலமானவர் என்றும் சொல்ல முடியாது.
தாகூர் டெபாசிட் சந்தேகம்தான்
இப்படிப்பட்ட சூழலில் கடந்த முறை வைகோவை சர்ச்சைக்கிடமான முறையில் தோற்கடித்த தாகூர் இந்த முறை டெபாசிட் கூட பெற மாட்டார் என்ற நம்பிக்கையில் மதிமுகவினர் மிகக் கடுமையான தீவிரத்தில் களம் குதித்துள்ளனர்.