மனசாட்சி இல்லாத ஜெயலலிதாவுக்கு மக்கள் தான் பாடம் புகட்ட வேண்டும்: ராமதாஸ்
சென்னை: மக்களை ஏமாற்றும் மனசாட்சி இல்லாத ஜெயலலிதாவுக்கு மக்கள் தான் பாடம் புகட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் 99-ஆவது பிறந்தநாளையொட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அதில், தமது
அர்ப்பணிப்பு வாழ்வை மக்களுக்கு விளக்கிக் கூறி தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தமது கட்சியினரை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என்ற முறையில் அவரது கட்சியினருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதுவதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
ஆனால், 5 ஆண்டுகளில் மக்களுக்கு எதிரான செயல்களை மட்டும் செய்து விட்டு மக்களுக்காகவே தாம் உழைத்ததைப் போன்று போலித் தோற்றத்தை உருவாக்க
ஜெயலலிதா முயல்வது தமிழக மக்களை அவமதிப்பது மட்டுமின்றி, ஏமாளிகள் ஆக்கும் செயல் ஆகும்.
மனசாட்சி
‘‘ஒவ்வொரு குடும்பத்திற்கும், அக்குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அரசாங்கத்தின் உதவியும், சலுகையும் பல வகைகளில் கிடைத்திடும் வகையில் எனது அரசு திட்டங்களை தீட்டி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டு செல்கிறது'' என்று அவர் கூறியுள்ளார். மனசாட்சியை விற்றவர்களாலேயே இத்தகைய உண்மை கலப்பற்ற பொய்யை கூற முடியும். ஜெயலலிதா அப்படிப்பட்டவர் என்பதால் தான் அவரால் ஏற்பட்ட வேதனைகளை சாதனைகளாக காட்டியிருக்கிறார்.
வரி விதிப்பு
2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜெயலலிதா பதவியேற்றார். அக்டோபர் 17 & 19 ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வரை அமைதி காத்தார். உள்ளாட்சித்
தேர்தல் முடிவுகள் வந்த சில நாட்களில் அதாவது 2011 நவம்பர் 17 ஆம் தேதி மின்கட்டணம், பேருந்து கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்தி ரூ.20,000 கோடி
சுமையை மக்கள் தலையில் சுமத்தியவர் ஜெயலலிதா. அதே ஆண்டில் வரி இல்லாத நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ததாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக,
அதற்கு முன்பாகவே ரூ.4,200 கோடி அளவுக்கு மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி மக்களை வதைத்தவர் தான் ஜெயலலிதா.
அப்பாவி மக்கள்
அடுத்த ஆண்டில் ரூ.5000 கோடிக்கு நிலங்களின் வழிகாட்டு மதிப்பை உயர்த்தினார். 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினார். 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.7350 கோடிக்கு இரண்டாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தினார். இந்த வரி, கட்டணம் மற்றும் விலை உயர்வின் மூலம் 5 ஆண்டுகளில் அப்பாவி தமிழக மக்களிடம் ஜெயலலிதா அரசு பறித்த தொகை மட்டும் ரூ.1.57 லட்சம் கோடி ஆகும்.
மது
ஒரு பக்கம் மக்களிடம் வரி மற்றும் விலை உயர்வின் மூலம் இவ்வளவு பணத்தை பறித்த அரசு, இன்னொரு புறம் மதுவிற்பனை மூலம் ரூ. 1.90 லட்சம் கோடியை
பறித்திருக்கிறது. இவையெல்லாம் போதாது என கடந்த 5 ஆண்டுகளில் அரசின் நேரடி கடனாக ரூ.1.10 லட்சம் கோடி, பொதுத்துறை நிறுவனங்களுக்கு ரூ.1.40 கோடி என
மொத்தம் ரூ.2.50 லட்சம் கோடி கடனை வாங்கிக் குவித்துள்ளது ஜெயலலிதா அரசு. தமிழகத்திலுள்ள ஒவ்வொருவர் தலையிலும் ரூ.60,000 கடன் சுமத்தப்பட்டிருக்கிறது. அந்த
வகையில் பார்த்தால் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பமும், அக்குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஜெயலலிதா அரசின் ஊழல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
பொய்
இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் எடுத்துக்காட்டாக, அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை தமது அரசு தொடர்ந்து வழங்கி வருவதாக இன்னொரு
பொய்யையும் ஜெயலலிதா கூறியிருக்கிறார். தமிழகத்திலுள்ள 90% மக்கள் பொங்கலுக்கு வேட்டி, சேலை எடுப்பதற்கு கூட வழியில்லாமல் அரசின் இலவச
வேட்டி-சேலைகளை எதிர்பார்த்திருப்பதும், ரூ.150 கூட மதிப்பில்லாத பொங்கல் பரிசுப் பைகளை வாங்குவதற்காக 92% குடும்பங்கள் கால் கடுக்க நியாயவிலைக் கடைகளில்
காத்துக் கிடப்பதும் தான் உள்ளடக்கிய வளர்ச்சியா? என்பதை முதல்வர் ஜெயலலிதா விளக்க வேண்டும்.
வளர்ச்சி
ஒட்டுமொத்த வளர்ச்சியில் 21 பெரிய மாநிலங்களில் 20 ஆவது இடத்தையும், வேளாண்மை, உள்ளடக்கிய மேம்பாடு ஆகியவற்றில் கடைசி இடத்தையும், உட்கட்டமைப்பு
வசதிகளில் 17-ஆவது இடம், கல்வித்துறையில் 13-ஆவது இடம் என தமிழகம் பின்தங்கியிருப்பது தான் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதா? என்பதற்கும்
ஜெயலலிதா தான் விளக்கமளிக்க வேண்டும். தமது அர்ப்பணிப்பு வாழ்வை மக்களிடம் பிரச்சாரம் செய்யும்படியும் அவர் கூறியுள்ளார். அர்ப்பணிப்பு வாழ்க்கை என்பதை விட
அபகரிப்பு வாழ்க்கை என்பது தான் பொருத்தமானதாக இருந்திருக்கும். கொடநாடு மாளிகை, சிறுதாவூர் மாளிகை, பையனூர் மாளிகை உட்பட சென்னை முதல்
கன்னியாகுமரி வரை குவித்து வைத்துள்ள அனைத்து சொத்துக்களும் ஏதோ ஒரு வகையில் அபகரிக்கப்பட்டவை தானே? ஜெயலலிதா வீட்டை விட்டு சாலைக்கு வந்தால்
மற்றவர்கள் சாலையை பயன்படுத்த தடை விதிப்பது அவர்களின் நடமாடும் சுதந்திரத்தை அபகரிக்கும் செயல் தானே? இதில் அர்ப்பணிப்பு எங்கே வந்தது?
கூச்சப்பட மாட்டார்
பொன் குடத்திற்கு பொட்டிட்டவாறு மக்களின் பேராதரவை தமது அரசு பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதைக் கூட வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியவாறு என்று
கூறியிருந்தால் அதுதான் பொருத்தமானதாக இருந்திருக்கும். மின்சாரம் வழங்காமலேயே கட்டணத்தை இருமுறை உயர்த்தியது, சாதனை படைக்காமலேயே ‘ஓராண்டு
சாதனை -நூறாண்டு வளர்ச்சி', ‘நான்காண்டு ஆட்சி-நாலாபுற வளர்ச்சி' என மக்களின் வரிப்பணத்தில் விளம்பரங்களை வாரி இறைத்தது என மக்களுக்கு செய்த
பாதகங்களையெல்லாம் சாதகங்களாக பிரச்சாரம் செய்வதற்கு முதல்வர் ஜெயலலிதா கூச்சப்பட வேண்டும். ஆனால், இதற்கெல்லாம் ஜெயலலிதா கூச்சப்பட மாட்டார். அது அவரது இயல்பாகிவிட்டது.
பாடம்
மக்களை மதிக்காத அவருக்கும் மக்கள் தான் பாடம் புகட்ட வேண்டும். ஐந்தாண்டுகளில் மக்களுக்கு எதையும் செய்யாத, மக்களை வதைப்பதை மட்டுமே முழு நேரப்பணியாகக் கொண்டிருந்த ஜெயலலிதா ஆட்சியை அகற்றுவதற்காக தமிழக மக்கள் உறுதியேற்று செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.