இந்த ஆண்டு காற்றலை மின்சார உற்பத்தி அதிகரிக்கும் – மின்தடை குறையும்!
கன்னியாகுமரி: காற்றாலைகளில் இந்த ஆண்டு அதிகபட்ச மின்சாரம் உற்பத்தியாகும் என காற்றாலை மின்சார உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு தேவையான மின்சாரம் அனல்மின் நிலையம், அணுமின்நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலைகள், டீசல் மின்சார உற்பத்தி நிலையம் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
இதில் புனல் மின்நிலையங்களும், காற்றாலைகளும் மின்சார உற்பத்தி செய்வதற்கு இயற்கையின் ஒத்துழைப்பு முழுமையாக தேவைப்படுகிறது.
காற்றின் மூலம் கரண்ட்:
குறிப்பாக காற்று உள்ள சீசனில் மட்டுமே காற்றாலைகளிலும் மழைக்காலங்களில் புனல் மின்நிலையங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட மின்சார உற்பத்தியை எட்ட முடியும். இருந்தாலும் காலநிலை மாற்றத்தால் மின்உற்பத்தியிலும் மாற்றம் ஏற்படுகிறது.
"பீக் லோட்" மாதங்கள்:
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் முடிய மூன்று மாதங்களில் காற்று அதிகம் வீசுவதால் அதிக பட்ச மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்கின்றன. இதனால் இந்த மூன்று மாதங்களும் காற்றாலைகளுக்கு "பீக் லோட்" மாதமாகும்.
ஈ ஓட்டும் மாதங்கள்:
இந்த மாதங்களில் சராசரியாக 3,500 முதல் 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்வது வழக்கம். மற்ற மாதங்களில் காற்றாலைகள் இரட்டை இலக்கம் அல்லது மின்சாரமே உற்பத்தி செய்யாமல் கிடப்பில் கிடக்கும்.
உற்பத்தி தொடக்கம்:
தற்போது பீக்லோட் மாதம் தொடங்காத நிலையில், "சீசன்" தொடங்குவதற்கு முன்பாக காற்றலைகள் மின்சார உற்பத்தியை தொடங்கின. குறிப்பாக நேற்று முன்தினம் 2,300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
முக்கிய பங்கில் கன்னியாகுமரி:
இதுகுறித்து காற்றாலை மின்சார உற்பத்தியாளர்கள் கூறியதாவது, "கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, முப்பந்தல் மற்றும் தூத்துக்குடி, கயத்தாறு, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள காற்றாலை மின்உற்பத்தி நிலையங்கள் தமிழக மின்சார உற்பத்தியில் முக்கிய பங்கை வகித்து வருகிறது.
கொட்டும் மழை:
கடந்த 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரத்துடன், கன்னியாகுமரி கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் மையம் கொண்டது. இதனால் இந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதனால் இம்மாத தொடக்கத்திலிருந்தே காற்றாலைகள் ஓரளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன.
அதிகமான உற்பத்தி:
குறிப்பாக நேற்று முன்தினம் 44 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று காலை 2,450 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று மொத்த மின்சாரத்தின் உற்பத்தி 11,583 மெகாவாட் என்ற நிலையில் பதிவானது.
மின் தடை இல்லை:
உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே வேறுபாடு இல்லாததால் நேற்று மின்தடை செய்யப்படவில்லை. பருவநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வரை காற்றாலைகளால் அதிகபட்ச மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. கோடைகாலத்தில் ஏற்படும் மின்பற்றாக்குறையை போக்க காற்றாலைகளும் இந்த ஆண்டு ஓரளவு கைகொடுத்துள்ளன" இவ்வாறு அவர்கள் கூறினர்.